அனுமதி இன்றி மகளிரணி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற.. அண்ணாமலை மீது 6 பிரிவுகளின் கீழ் பாய்ந்த வழக்கு
சென்னை: சென்னையில் பாஜக மகளிரணியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாநில தலைவர் அண்ணாமலை மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பேச்சாளர் சைதை சாதிக் என்பவர் அவதூறாக விமர்சித்திருந்தார். அந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகைகளை மிகவும் கொச்சையாக இரட்டை அர்த்த வார்த்தைகளை கொண்டு அவர் விமர்சித்திருந்தது அந்த கட்சியை சேர்ந்த திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழிக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.
கனிமொழி எப்போதும் பெண்கள் மீது அவதூறு பரப்பும் விஷயங்களில் சமரசம் செய்து கொள்ள மாட்டார். அது சொந்த கட்சியினராக இருந்தாலும் தன்னால் சகித்து கொள்ள முடியாது என்பதை குஷ்புவுக்கு கனிமொழி பதில் அளித்த விதத்திலேயே தெரிந்துவிட்டது.

திமுக சைதை சாதிக்
திமுகவை சேர்ந்த சைதை சாதிக் இவ்வாறு பெண்களை மோசமாக விமர்சித்துள்ளார் என குஷ்பு, கனிமொழியை டேக் செய்து ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். இதற்கு கனிமொழி எதிர்வினையாற்றியதில், ஒரு பெண்ணாகவும் மனிதராகவும் இதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். இதை யார் செய்திருந்தாலும் சொன்ன இடம் அல்லது அவர்கள் சார்ந்த கட்சி எதுவாக இருந்தாலும் இது எக்காரணத்தை கொண்டு சகித்துக் கொள்ள முடியாதது.

மன்னிப்பு கேட்க முடிகிறது
இதற்காக என்னால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்க முடிகிறது. எனது தலைவர் ஸ்டாலினுக்கும் எனது கட்சியான திமுகவுக்கும் இது ஒரு போதும் ஏற்புடையது இல்லை என தெரிவித்துள்ளார். இதற்கு குஷ்பும் நன்றி தெரிவித்து, அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டிருந்தார். இந்த நிலையில் குஷ்பு உள்ளிட்டோரை ஆபாச வார்த்தைகளால் விமர்சித்த சைதை சாதிக்கை கைது செய்ய கோரி நேற்றைய தினம் மகளிரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வள்ளுவர் கோட்டம்
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த மகளிரணியினர் ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அவர் திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார். இதையடுத்து அண்ணாமலை உள்ளிட்டோர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக போலீஸார் அவர்களை கைது செய்தனர்.

6 பிரிவுகளின் கீழ் வழக்கு
இதையடுத்து நேற்று மாலை கைதானவர்களை இரவு நேரத்தில் விடுதலை செய்தனர். அண்ணாமலை மீது போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அது போல் மேலும் 370 பாஜகவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications