புஸ்ஸி ஆனந்த் அப்போவே சொல்ல வேண்டியதுதானே? தவெக வழக்கில் போலீஸ் தரப்பு கேள்வி
சென்னை: கரூர் தவெக பிரச்சாரத்திற்கு வேலுச்சாமிபுரம் இடம் திருப்தியாக இருக்கிறது என கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறினார், அவர் அப்போதே அந்த இடம் வேண்டாம் என சொல்ல வேண்டியதுதானே என தவெக வழக்கில் போலீஸ் தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது. தவெகவுக்கு அதிர்ச்சி தரும் வகையில் நிறைய கண்டனங்களை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை நடிகரும் தவெக தலைவருமான விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தை நடத்தினார். அப்போது பகல் 12 மணிக்கு வருவதாக விஜய் சொல்லிவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டிருந்ததால், காலை 9 மணி முதலே வேலுச்சாமிபுரத்தில் மக்கள் கூடினராம்.

அவர் இதோ வந்துவிடுவார், அதோ வந்துவிடுவார் என்பதால் மக்கள் யாரும் தண்ணீர் குடிக்கவோ, உணவு அருந்தவோ செல்லவில்லையாம். ஆனால் விஜய்யோ இரவு 7 மணிக்குத்தான் கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு வந்துள்ளார்.
அவரது வாகனம் வந்த போது அவர் முகத்தை காட்டாததால் வழியில் நின்றிருந்தவர்கள் விஜய்யின் முகத்தை பார்க்க அங்கிருந்து அந்த வாகனத்துடன் புறப்பட்டு பிரச்சார இடத்திற்கு வந்ததாக சொல்லப்படுகிறது. ஏற்கெனவே அங்கு கூட்ட நெரிசல் இருக்கும் நிலையில் மேலும் பலர் கூடினர்.
இதனால் நெரிசலில் சிக்கியும் நீர்ச்சத்து குறைந்து மக்கள் மயங்கி விழுந்தனர். இதனால் ஏற்பட்ட பதற்றத்தால் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது பஸ்வேறு பிரிவுகளின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த மூன்று பேரையும் போலீஸார் தேடி வந்தனர். அதில் மதியழகன், அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக நகரச் செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது காவல் துறை தரப்பு தன் வாதத்தில் கூறுகையில், "தவெக கேட்ட லைட் ஹவுஸ் பகுதியில் ரயில்வே பாலம் இருப்பதால் அனுமதி தரவில்லை. மேலும் சனிக்கிழமை சம்பள நாள் என்பதால் அன்று மார்க்கெட் பகுதிக்குள் அதிக மக்கள் வருவார்கள் என்பதால் அவர்கள் கேட்ட இடத்தை கொடுக்கவில்லை.
விஜய் நேரத்தை கடைப்பிடிக்காததே கூட்ட நெரிசலுக்கு காரணம். பரப்புரை வாகனம் குறிப்பிட்ட இடத்தை வந்ததும் நான் போதும் என்றேன். ஆனால் ஆதவ் அர்ஜுனாதான் "இன்னும் முன்னே செல்வோம்" என்றார். அது போல் முனுசாமி கோயில் பகுதியில் புஸ்ஸி ஆனந்த் வாகனத்தை நிறுத்தி தாமதம் செய்தார்.
லைட் ஹவுஸ் பகுதியில் அனுமதி கேட்ட போது அங்கு ரயில்வே பாலம் இருப்பதால் அங்கு பரப்புரைக்கு அனுமதிக்கவில்லை. அது போல் உழவர் சந்தை பகுதி குறைந்த பரப்பளவு கொண்ட பகுதி என்பதால் அந்த இடத்தையும் கொடுக்கவில்லை.
வேலுச்சாமிபுரத்தை கொடுத்த போது அந்த இடம் திருப்தியாக இருப்பதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார். அப்போதே அவர் வேண்டாம் என சொல்ல வேண்டியதுதானே என டிஎஸ்பி கேள்வி எழுப்பியுள்ளார். இப்படியாக இந்த வழக்குச் சென்ற நிலையில் மதியழகன், பவுன்ராஜுக்கு அக்டோபர் 14ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications