தூத்துக்குடி ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவை சென்னையில் சுட்டுப் பிடித்த போலீஸ்
சென்னை: சென்னையில் பதுங்கியிருந்த பிரபல ரவுடியும், கூலிப் படை கும்பலின் தலைவருமான ஹைகோர்ட் மகாராஜாவை அவரது காலில் போலீஸார் சுட்டுப் பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானம் அருகே தனிப்படை போலீஸார் ரவுடியின் காலில் சுட்டுப் பிடித்துள்ளனர்.

சென்னை வேளச்சேரி தரமணி சாலையில் மார்ச் 14 ஆம் தேதி வேளச்சேரி போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்தின்பேரில் தூத்துக்குடி தாளமுத்தூரைச் சேர்ந்த வினோத் 27, சென்னை மணலியைச் சேர்ந்த பாலமுருகன் 23, மாதவரத்தைச் சேர்ந்த சுரேஷ் ஆகிய மூன்று பேரிடம் போலீஸார் விசராணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இவர்கள் ஆதம்பாக்கம், நகைக்கடை அதிபரின் மகனை கடத்தி பணம் பறிக்கத் திட்டமிட்டிருந்தது. இதுகுறித்து தனிப்படை போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தூத்துக்குடியைச் சேர்ந்த 3 பேர் கொண்ட கும்பலை போலீஸார் துப்பாக்கி முனையில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்த ரவுடி ஹைகோர்ட் மகாராஜா மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த ரவுடியைப் பிடிக்க இணை ஆணையர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது
தனிப்படை போலீஸார் தேடி வந்த நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடியும், கூலிப் படை கும்பலின் தலைவனுமான ஹைகோர்ட் மகாராஜா நெல்லையில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற தனிப்படையினர் மகாராஜவை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
அப்போது, இந்த குற்றச செயலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, இன்று அதிகாலை தனிப்படை போலீஸார் அந்த இடத்துக்குச் சென்றனர். அப்போது திடீரென அந்த வண்டியில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மிரட்டியதோடு, போலீஸாரை துப்பாக்கியால் சுடத் தொடங்கியுள்ளார்.
துப்பாக்கியில் குண்டுகள் இல்லாததால் கற்களைக் கொண்டு போலீஸார் மீது வீசியுள்ளார். இதில் போலீஸாரின் வாகனத்தின் கண்ணாடி உடைந்தது. இதையடுத்து, போலீஸார் தற்காப்புக்காக ரவுடியின் காலில் துப்பாக்கியால் சுட்டு அவரை பிடித்தனர்.
தற்போது அருகில் உள்ள மருத்துவமனையில் ஹைகோர்ட் மகாராஜா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் என ஏற்கனவே 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் மீது தூத்துக்குடி காவல் நிலையத்தில் ஏற்கனவே 2017ஆம் ஆண்டு கொலை வழக்கு உள்ளது. கொலை முயற்சி, ஆள்கடத்தல், கொள்ளை என இவர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.












Click it and Unblock the Notifications