மறக்காமல் குட்டீசை கூட்டிட்டு போங்க.. தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்!
தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது.
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது.
இந்தியாவில் போலியோ குறைபாடு முற்றிலுமாக தடுக்கப்பட்டு இருக்கிறது. புதிதாக பிறக்கும் எந்த குழந்தைகளுக்கும் தற்போது போலியோ ஏற்படுவதில்லை. ஊராட்சி, கிராமங்கள், ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கி பெரிய மருத்துவமனைகள் வரை இதற்காக கடுமையாக உழைத்து இருக்கிறார்கள்.

பல வருட பிரச்சாரம், தீவிர உழைப்பு, மக்களிடம் செய்யப்பட்ட விழிப்புணர்வும் இதற்கு முக்கிய காரணம். இந்தியாவில் போலியோ ஒழிக்கப்பட்டதற்கு உலக நாடுகள் எல்லாம் பாராட்டு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தொடர்ந்து தற்போது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டு வருகிறது. போலியோ ஒழிக்கப்பட்டாலும் தொடர்ந்து சொட்டு மருந்து வழங்கும் பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. தமிழகம் முழுக்க 43,051 மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்படும். 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் எல்லோருக்கும் போலியோ மருந்து அளிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். அதேபோல் 1000க்கும் அதிகமான நடமாடும் சுகாதார மையங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட இருக்கிறது.
இந்த வருடம் சுமார் 75 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications