செங்கோட்டையன் விவரமானவர்.. பாஜகவை நம்பி போக மாட்டார்.. அடித்து சொல்லும் ராஜகம்பீரன்
சென்னை: செங்கோட்டையன் விவகாரம் அதிமுகவில் அனல் பறந்து கொண்டிருக்கிறது. வரும் நாள்களில் இந்தப் பிரச்னை இன்னும் தீவிரமாகும். செங்கோட்டையன் பாஜகவுக்கு கூட செல்ல வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன், செங்கோட்டையன் பாஜக பக்கம் சாய மாட்டார். எடப்பாடியுடன் சமரசம் ஆகிவிடுவார் என்று கூறியுள்ளார்.
அதிமுகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கருத்துகள் தினசரி வெளியாகி அந்தக் கட்சிக்குள் களேபரங்களை ஏற்படுத்தி வருகிறது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவர் தர்ம யுத்தத்தில் இறங்கியுள்ளார் இனி அடுத்தடுத்து அதிரடிகள் அரங்கேறும் என்று தகவல் வெளியாகி வருகிறது. மறுபக்கம் இதன் பின்னணியில் பாஜக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் செங்கோட்டையன் விவகாரம் குறித்து அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "ஏற்கனவே அதிமுகவில் சசிகலா, தினகரன், ஓபிஎஸ் அணிகள் உள்ளன. தற்போது புதிதாக செங்கோட்டையன் அணி உருவாகியுள்ளது. செங்கோட்டையனின் அடுத்த டார்கெட் பொதுச்செயலாளர் தான். நான்தான் கட்சி என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். அவர் இறங்கி வர மறுக்கிறார்.
பாஜக இல்லாமல் அரசியலில் சகுனி வேலை சாத்தியமே இல்லை. அதை ஏற்று கொண்டு அவர்களுக்கு பழி ஆவார்களா இல்லையா என்பதுதான் கேள்வி. நாடாளுமன்ற தேர்தலில் டிடிவி தினகரன் தேனியில் வெற்றி பெற்றாரா. அதே கட்சியில் இருந்து திமுகவுக்கு சென்ற தங்க தமிழ்செல்வன் தானே வெற்றி பெற்றார். பாஜகவுடன் இணைந்தால் தமிழக மக்கள் வெற்றி தர மாட்டார்கள்.
அதனால் தான் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் இணைய மறுக்கிறார்கள். வாக்கு அதிகம் கிடைத்தால் அவர் ஏன் பாஜக வேண்டாம் என்று சொல்ல போகிறார். தினகரன், ஓபிஎஸ், சசிகலா வெளியில் வந்து கட்சியை காப்பாற்ற வேண்டும் என்று சொல்வார்கள். உண்மையில் அவர்கள் பாஜகவிடம் எங்கள் சொத்துகளை காப்பாற்றுங்கள் என்று தான் கேட்கிறார்கள்.
நாங்கள் கறுப்பு பணம் வைத்துள்ளோம். முறைகேடாக சம்பாதித்து சொத்து வைத்துள்ளோம். அதை அமலாக்கத்துறை மூலம் பறித்து சென்றுவிடாதீர்கள் என்று தான் அவர்கள் கூறுவார்கள். செங்கோட்டையன் முழுமையாக பாஜக பக்கம் சாய மாட்டார். அதிமுகவில் தனக்கு முக்கியத்துவம் தரவில்லை என்பதற்கு அவர் எதிர்வினை ஆற்றிவிட்டார்.
எதிர்வினை ஆற்றுவதுடன் அவரின் எல்லை முடிந்துவிடும். சீனியர் என்பதால் அதைத்தாண்டி எல்லாம் அவர் செல்ல மாட்டார். அவருக்கு வயதாகிவிட்டது. இதன் பிறகு எல்லாம் அவர் ஒரு அணியை உருவாக்கி அரசியல் செய்வது கடினம். சிலர் அவருக்கு தேடி வந்து ஆதரவு தெரிவித்தாலும் செங்கோட்டையன் அப்படி செய்ய மாட்டார்.
காங்கிரஸ் கட்சிக்குள் ஒவ்வொரு தலைவர்களுக்கும் தனி ஆதரவாளர்கள் இருப்பது போல, அதிமுகவில் செங்கோட்டையனுக்கு தனி ஆதரவாளர்கள் இருப்பார்கள். இது எல்லா கட்சியிலும் இயல்புதான். அவர் அதிமுகவை விட்டு வெளியில் செல்ல மாட்டார். அதிமுகவில் இருந்து வெளியில் சென்ற ஓபிஎஸ் நிலைமை எல்லாம் அவருக்கு நன்கு தெரியும். அதனால் பாஜகவை நம்பி போக மாட்டார்.
அதனால் இன்னொரு தர்மயுத்தம் எல்லாம் நடக்காது. எடப்பாடியுடன் சமரசம் நடந்துவிடும். அவருக்கு தேவையான எல்லாவற்றையும் செய்துவிடுவார்கள். அதிமுக அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிக்கு கொண்டு வந்துவிடுவார்கள். அதைத்தான் அவரும் எதிர்பார்க்கிறார். செங்கோட்டையன் விவரம் இல்லாத நபர் இல்லை. இது உரிமை சார்ந்த சண்டை. கட்சியை விட்டு செல்ல மாட்டார்." என்றார்.












Click it and Unblock the Notifications