தேமுதிக பிளான் என்ன.. பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு முன் யோசிக்க வேண்டும்.. சட்டென சொன்ன பிரேமலதா
சென்னை: மத்திய அரசோடு கூட்டணி வைப்பதற்கு முன் எல்லா கட்சிகளும் யோசிக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களோடு மட்டும் தான் கூட்டணி வைப்போம் என்று ஒவ்வொரு கட்சியும் முடிவெடுத்தால் தமிழ்நாட்டுக்கு நிச்சயம் நல்லது நடக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து ஒவ்வொரு கட்சியும் நன்கு யோசிக்க வேண்டும் எனக் கூறினார். தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி முறிந்துள்ள நிலையில் பிரேமலதா விஜயகாந்தின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்தும் பெற்றுள்ளது. பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் தினமும் ஏராளமானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, தமிழக அரசு கவனம் செலுத்தி டெங்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சுகாதார சீர்கேடு உள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை பெறுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டங்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களின் பிரச்சனைக்கு அரசு முற்றுபுள்ளி வைக்க வேண்டும். 40 தொகுதியிலும் வெற்றிபெறுவோம் இந்தியாவை காப்போம் என சொல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், முதலில் தமிழ்நாட்டை காக்க வேண்டும். தமிழ்நாட்டில் கொடுத்த வாக்குறுதிகளை முதலில் அவர் நிறைவேற்ற வேண்டும். தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ளது. எந்த கட்சியும் தங்களுடைய நிலைப்பாட்டை இப்போது வரை சொல்லவில்லை.
எல்லோரும் என்ன சொல்கிறார்கள். தேர்தல் வரும் போது எங்கள் நிலைப்பாட்டை சொல்கிறோம்.. தேர்தல் வரும் போது யாருடன் கூட்டணி என்று சொல்கிறோம் என சொல்கிறார்கள். முதலில் இதை தேமுதிகதான் சொல்லியது. உரிய நேரம் வரும் போது யாருடன் கூட்டணி..எந்த தொகுதி..என்பதை அறிவிப்போம். பாஜக - அதிமுக கூட்டணி முறிவுக்கு இரண்டு கட்சிகளும் தான் காரணம். அவர்களுடைய கூட்டணி முறிவுக்கு தேமுதிகவிற்கு எந்த பங்கும் கிடையாது.
எனவே பாஜக அதிமுக கூட்டணி முறிவு பற்றிய கேள்விகளை அந்த கட்சிகளிடம் தான் கேட்க வேண்டும். மூன்று மாதத்திற்குள் தேமுதிக நிலைப்பாட்டை தெரிவித்து விடுவோம். தமிழ்நாட்டுக்கு அவர்கள் (பாஜக) என்ன செய்தார்கள்.. யோசித்து பாருங்கள்.. தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் இன்றும் அப்படியே தான் இருக்கிறது. எந்த பிரச்சினையாவது தீர்க்கப்பட்டிருக்கிறதா?. கச்சத்தீவை மீட்டு எடுத்தார்களா?..

மீனவர்கள் பிரச்சினைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதா?.. காவிரியில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் வந்திருக்கிறதா.. கிடைக்கிறதா.. இல்லை அவர்கள் இங்கே கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டிருக்கிறதா? எதுவுமே இல்லை.. அதனால் நான் என்ன சொல்கிறேன் என்றால்..
மத்திய அரசோடு கூட்டணி வைப்பதற்கு முன் எல்லா கட்சிகளும் யோசிக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களோடு மட்டும் தான் கூட்டணி வைக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் ஒவ்வொரு கட்சியும் யோசிக்க வேண்டும். இப்படி யோசித்து செயல்பட்டால் தமிழ்நாட்டுக்கு நிச்சயம் நல்லது நடக்கும். இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.












Click it and Unblock the Notifications