காமராஜர் சிலைக்கு செருப்பு மாலை... சமூக விரோதிகளுக்கு தலைவர்கள் கண்டனம்
சென்னை: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் காமராஜர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே காமராஜர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தவர்களை கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அவமதிப்பு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள காமராஜர் வெண்கலச் சிலைக்கு நேற்றிரவு சமூக விரோதிகள் சிலர் செருப்பு மாலை அணிவித்திருந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதை அடுத்து போலீஸார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டு, சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துணிச்சல்
அதிமுக ஆட்சியில் பொதுமக்களைப் போலவே தலைவர்கள் சிலைக்கும் பாதுகாப்பில்லை என்றும், இத்தகைய இழிசெயல்கள் தொடர இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்ற துணிச்சலே காரணம் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வலியுறுத்தல்
காமராஜர் சிலையை அவமதித்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும், இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

கைது செய்யவில்லை
பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தது படுபாதக செயல் என்றும், இதனை தமிழக காங்கிரஸ் கமிட்டி மிக வன்மையாக கண்டிப்பதாகவும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். மேலும், சமூக விரோதிகளை இதுவரை காவல்துறையினர் கைது செய்யவில்லை எனக் கூறியிருக்கிறார்.

கடும் நடவடிக்கை
மறைந்த தலைவர்களை இழிவுபடுத்தும் வகையிலான செயல்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறுவது தமக்கு வருத்தம் அளிப்பதாகவும், இதனை நிரந்தரமாக தடுத்து நிறுத்த காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications