அன்புடன் ”டீலிங்” - ஐடி விரித்த வலை! நழுவிய “பெரிய இடம்”.. கொத்தாக சிக்கும் கோலிவுட் தலைகள்
சென்னை: சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையை போல் அரசியல் வாரிசு நடிகர் வீட்டில் சோதனை நடத்தப்படலாம் என்று பேசப்பட்டு வந்த நிலையில், அவர் நேரடியாக எந்த பணத் தொடர்பும் வைத்திருக்கவில்லை என்பதால் இதிலிருந்து நழுவி இருக்கிறார்.
மதுரை அன்பு என்று அழைக்கப்படும் பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தமிழ் மட்டுமின்றி இந்திய அளவிலான சினிமாக்களுக்கு பைனான்ஸ் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் அன்புச்செழியனிடமே கடன் பெற்று திரைப்படங்களை தயாரித்து வருகின்றன.
உக்ரைனில் இதைக்கூடவா ரஷ்யா விட்டு வைக்கல? கொந்தளிக்கும் சர்வதேச நாடுகள்
இந்த நிலையில்தான் கடந்த 4 நாட்களாக அன்பு மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்றது. டெல்லியிலிருந்து வந்த அதிகாரிகள் கடந்த 2 ஆம் தேதி அதிகாலை 5:30 மணி முதல் சென்னை, மதுரையில் உள்ள அன்புச்செழியனின் வீடு, அலுவலகங்கள், சைதாப்பேட்டையில் உள்ள திரையரங்கம், மதுரையில் உள்ள திரையரங்கம் என பல இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
தயாரிப்பாளர்கள்
இதேபோல், முன்னணி தயாரிப்பாளர்களான சத்யஜோதி தயாரிப்பு நிறுவன தலைவர் தியாகராஜன், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தலைவர் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ், ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவன தலைவர் ஞானவேல் ராஜா, வி கிரியேசன்ஸ் தயாரிப்பு நிறுவன தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா உள்ளிட்டோரின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிரடி சோதனை மேற்கொண்டது.
அறிக்கை
மேலும் மதுரை அன்புவிடம் நிதிபெற்ற திரைப்படங்களை தயாரித்த 20 முன்னணி தயாரிப்பாளர்கள் இந்த வருமான வரித்துறை சோதனையில் உட்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியானது. 4 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின் முடிவடைந்ததை தொடர்ந்து வீடுகள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் அலசி ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டு இருக்கின்றனர்.
சிண்டிகேட்
இதில் ரூ.200 கோடி முறையற்ற வருவாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், ரூ.26 கோடி ரொக்கம் மற்றும் ரூ.3 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. இதேபோல், தயாரிப்பாளர்கள், பைனான்சியர்கள் சிண்டிகேட் அமைப்பை உருவாக்கி வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.
மிகப்பெரிய ரெய்டு
தமிழ் சினிமா வரலாற்றில் இதுவே மிகப்பெரிய ஐடி ரெய்டு. டெல்லியிலிருந்து வந்த 350 அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து சோதனையிட்டு உள்ளார்கள். வாட்ஸ் அப் உரையாடல்களை வைத்தே வருமான வரித்துறை அதிகாரிகள் பலரை பிடித்துள்ளனர். அதுமட்டுமின்றி திரைப்படங்களின் வசூல் நிலவரங்கள் தொடர்பாக தயாரிப்பு நிறுவனங்கள் ஆயிரம் கோடி, 500 கோடி, 100 கோடி வசூல் என வெளியிடும் விளம்பரங்களும் இதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
தப்பிய பெரும் புள்ளி
அன்புச்செழியன் மற்றும் தயாரிப்பாளர்களுடன் சேர்த்து, "சமீபத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபீசை புரட்டிப் போட்ட திரைப்பட "நாயகன்" வீடுகளிலும், பல ஆண்டுகளாக திரைப்படங்களை தயாரித்தும், நடித்தும், பல திரைப்படங்களை போட்டி போட்டு வாங்கும் முன்னணி அரசியல் வாரிசுக்கு தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்படலாம் என்ற தகவலும் வெளியானது. ஆனால், இவர்கள் இருவர் வீடுகளிலும் சோதனை நடத்தப்படவில்லை.
முக்கிய தயாரிப்பாளர்கள்
இதற்கு முக்கிய காரணம், அன்புச்செழியனிடம் அந்த அரசியல் வாரிசு நடிகர் நேரடியாக பணத் தொடர்பு வைத்திருக்கவில்லை என்றும், தான் வாங்கும் படத்தில் கிடைக்கும் லாபத்தை தயாரிப்பாளரிடம் முறையாக கணக்கிட்டு வழங்கிவிட்டவதால் அவருக்கு சிக்கல் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது. அதே நேரம் இந்த வருமான வரித்துறை சோதனையில் தமிழ் சினிமாவின் பல முக்கிய தயாரிப்பாளர்கள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் அன்புச்செழியன் தன்னிடம் கடன் வாங்கும் தயாரிப்பாளர்கள் கடன் தொகையை திருப்பி செலுத்திய பிறகும் கூட அவர்களிடம் பிடிமானமாக வாங்கிய ஆவணங்களை வீட்டில் வைத்திருப்பது வழக்கம். எனவே அந்த ஆவணங்கள் அடிப்படையில் எந்த தயாரிப்பாளர்கள் இவரிடம் கடன் பெற்றார்கள் என்பதை வருமான வரித்துறையினர் அறிந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த தயாரிப்பாளர்கள் தாக்கல் செய்த வருமான வரித் தொகை மற்றும் கடன் பெற்ற தொகை ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போது வரி ஏய்ப்பு நடைபெற்றால் தெரிந்து விடும் என்பது குறிபிடத்தக்கது.