பொள்ளாச்சி பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்.. தமிழக காங். செயல் தலைவருக்கு சிபிசிஐடி சம்மன்
Recommended Video
சென்னை: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக, தமிழக காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு, சிபிசிஐடி காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, முக்கிய குற்றவாளியாக கருதப்படும், திருநாவுக்கரசு உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
பொள்ளாச்சியில் போட்டியிடுவது அதிமுகவா.. பாஜகவா... தொண்டர்களை குழப்பிய சின்னம்!
சிபிசிஐடி விசாரணை
இந்த நிலையில் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு பிறகு சிபிஐக்கு, தமிழக அரசால் பரிந்துரை செய்யப்பட்டது. சிபிஐ இன்னும் இந்த வழக்கு விசாரணையை ஆரம்பிக்காத நிலையில், சிபிசிஐடி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
திடுக்கிடும் திருப்பம்
திருநாவுக்கரசிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தியதில், திருப்பம் தரும், தகவல் ஒன்று கிடைத்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாரை, தான் சந்திக்க சென்றிருந்ததாகவும், பாலியல் துன்புறுத்தல் நடந்த தினத்தில் நான் அவருடன் தான் இருந்தேன் என்றும் விசாரணையில் தெரிவித்தாராம். தனக்கு மயூரா ஜெயக்குமார் நன்கு அறிமுகமானவர் என்று திருநாவுக்கரசு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
விசாரணை
திருநாவுக்கரசு கூறுவது உண்மையா என்பது தொடர்பாக, மயூரா ஜெயக்குமாரிடம் விசாரணை நடத்துவதற்காக, சிபிசிஐடி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 25-ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகும்படி அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பங்கள்
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரம், புது திருப்பங்களுடன் பயணிக்க தொடங்கியுள்ளது. இதனால் வழக்கு விசாரணையில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, திமுக தலைவர், ஸ்டாலின் மருமகன் சபரீசன் தன்மீது களங்கம் ஏற்படுத்துவதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் புகார் அளித்ததும், அதற்கு பதிலாக, சபரீசன் பதில் புகார் அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.