இன்று முதல் உங்கள் கையில் பொங்கல் பரிசு.. ரூ.1000 ரொக்கம்.. ரேஷன் கடைகளில் கிடைக்கும்
Recommended Video
சென்னை: தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி அட்டை கார்டு வைத்துள்ளவர்களுக்கு இன்று முதல் 13ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14,15,16,17 ஆகிய நான்கு நாட்கள் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த திருவிழா தமிழர் திருநாளாக கொண்டாடப்படுகிறது.
மக்கள் பொங்கல் திருநாளை உற்சாகமாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் ஆகியவை கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அறிவித்தபடி திட்டத்தை தலைமைச்செயலகத்தில் அவர் தொடங்கி வைத்தார்.

13 ம் தேதி வரை
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்த காரணத்தால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் வருகிற 9ம் தேதி தொடங்கி 13ம் தேதி வரை பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இரண்டு 500 தாள்கள்
இதன்படி தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் இன்று காலை 9 மணிக்கு பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் தொடங்கியது. மாலை 6மணி வரை வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும். 1000 ரொக்க பணம் இரண்டு 500 தாள்களாகவும், கரும்பு துண்டு, சர்க்கரை, பச்சரிசி, ஏலக்காய்,முந்திரி உள்பட பொங்கல் வைக்க தேவையான பொருட்களும் வழங்கப்படுகிறது.

தினசரி தெருவாரியாக
ரேஷன் கடைகளில் தினசரி 250 முதல் 300 பேருக்கு தெரு வாரியாக பிரித்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்னணு குடும்ப அட்டை(ஸ்மார்ட் கார்டு) மூலமாகத்தான் பொங்கல் பரிசு வழங்கப்படும். ஸ்மார்ட்கார்டு இல்லை என்றால் அந்த குடும்ப அட்டையில் உள்ள நபர்களில் ஏதேனும் ஒருவரின் ஆதார் அடையாள அட்டையை காண்பித்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் கடவு எண்ணை அடிப்படையாக வைத்தோ பொங்கல் பரிசை பெறலாம்.

கையெழுத்து வாங்குவர்
பொங்கல் பரிசு வழங்கிய உடன் குடும்ப அட்டைதாரர்களின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் வந்துவிடும். பொங்கல் பரிசு வாங்கியதை உறுதி செய்யும் வகையில் ஒப்புதல் படிவத்தில் வாங்கயவரிடம் கையெழுத்து வாங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு தமிழகம் முழுவதும் சுமார் 2.5 கோடி அரசி பெறும் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசு ரூ.2363 கோடியை ஒதுக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications