முதல்வர் செம அறிவிப்பு.. பொங்கலை முன்னிட்டு ரேஷன் கடைகளில் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு
சென்னை: பொங்கலுக்கு 20 பொருள்கள் தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பொங்கல் திருநாளுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்படி, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும்.
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொருட்கள் விவரம்
பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவை இந்த 20 பொருட்களாகும். ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் இது வழங்கப்படுகிறது.

ரொக்கப் பரிசு இல்லை
அதேநேரம், கடந்த வருடம் பொங்கலுக்கு தமிழக அரசு வழங்கியதை போல ரூ.2500 ரொக்கப் பரிசு இம்முறை வழங்கப்படவில்லை. கொரோனா ஊரடங்கு காலம் என்பதால், கடந்த முறை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, அரிசி அட்டைதாரர்களுக்கு ரொக்கப் பணம் வழங்கியிருந்தது. எனவே இந்த முறையும் பணம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது.

ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக 2 கோடியே 7 லட்சம் ரேசன் கார்டு அட்டைதாரர்களுக்கு, 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி, இரு தவணைகளில் தலா 2000 வழங்கப்பட்டது. எனவே இந்த முறை பொங்கலுக்கு பணம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல்
இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பொங்கலுக்கு முன்பே நடைபெறும் வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விகளை இந்த அறிவிப்பு எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

அபார வெற்றி
இந்தத் தேர்தலில் வெற்றியை ஆளும் திமுக கூட்டணி 93 சதவிகிதம் பெற்றது. காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க ஆகிய கட்சிகளுக்கும் குறிப்பிடத்தக்க இடங்களில் வெற்றி பெற்றன. அதிமுக மோசமாக தோற்றது. இதன் அடுத்தகட்டமாக, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் தி.மு.க இறங்கி உள்ளது. தற்போதைய நிலையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி வரக் கூடிய நான்கு மாதங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் ஆகும்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
திருச்சியில் அண்மையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்துமாறு முதல்வர் தெரிவித்துள்ளார். அதற்கான ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கிவிட்டன என்று தெரிவித்திருந்தார். ஜனவரி மாதம் 14ம் தேதி பொங்கல் விழா வருகிறது. ஆனால் அரசு இப்போதே பொங்கல் பரிசு பொருள் தொடர்பாக அறிவித்துள்ளது. எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்கூட்டியே வருகிறதா என்ற கேள்வி எழுகிறது.












Click it and Unblock the Notifications