சென்னைக்கு 4,500 சிறப்புப் பேருந்துகள்... இன்று முதல் திங்கள்கிழமை வரை இயக்கம்
சென்னை: பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்புவதற்கு வசதியாக 4,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இன்று இரவு தொடங்கி வரும் திங்கள்கிழமை வரை பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பேருந்து நிலையங்களிலும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் முகாமிட்டு சிறப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு வருகின்றனர்.

சொந்த ஊர்
பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக சுமார் 10 லட்சம் பேர் சென்னையில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்கள் அனைவரும் மீண்டும் சென்னை திரும்புவதற்கு வசதியாக போக்குவரத்துறை சார்பாக சிறப்பு பேருந்துகள் கூடுதல் எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன.

திங்கள் வரை
பன்னாட்டு ஐ.டி. நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு நாளை வேலை நாள் என்பதால் ஆயிரக்கணக்கானோர் இன்று வெளியூர்களில் இருந்து சென்னை திரும்புவர். அதேசமயம் கடைகளில், உணவகங்களில், பணிபுரிவோர் கூடுதலாக இரண்டு நாட்கள் ஊரில் இருந்துவிட்டு வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரிகள் முகாம்
திருச்சி, கோவை, மதுரை, சேலம், நெல்லை, என பல முக்கிய நகரங்களில் இருந்து சென்னைக்கு 4,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் இன்றிரவு தொடங்குகிறது. ஒவ்வொரு பேருந்து நிலையங்களிலும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் முகாமிட்டு சிறப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசல்
வரும் நான்கு நாட்களுக்கும் சென்னையின் எல்லையான பெருங்களத்தூர் தொடங்கி தாம்பரம் வரை காலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், அதனை சமாளிக்க கூடுதல் எண்ணிக்கையில் போக்குவரத்து போலீஸார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications