பொங்கல் பண்டிகைக்காக மேலும் ஒரு ஸ்பெஷல் ரயில்.. இன்று இரவு சென்னையில் இருந்து கிளம்பும்!
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை எழும்பூரில் இருந்து கொச்சுவேலிக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எழும்பூரில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்திற்கு நாளை மதியம் 2 மணிக்கு சென்றடையும்.
பொங்கல் பண்டிகையையொட்டி, 6 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட பலரும் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கி விட்டனர். பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தெற்கு ரயில்வே சார்பில் முக்கிய வழித்தடங்களில் பொங்கல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் ஏராளமானோர் பயணித்து வருகின்றனர்.
அந்தவகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி, மதுரை, நெல்லை வழியாக சென்னையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில், இன்று இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படுகிறது.

இந்த ரயில் சென்னை தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், திருவனந்தபுரம் சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
நாளை பிற்பகல் 2 மணியளவில் திருவனந்தபுரம் வடக்கு (கொச்சுவேலி) ரயில் நிலையத்திற்குச் சென்றடையும். ஒரு மார்க்கத்தில் மட்டும் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயிலில் 10 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications