"2" இடி மத்தளத்துக்கு.. பொன்முடி எதிர்பார்க்கல.. ஜூடிஷியல் நெருக்கடியில் திமுக.. ஸ்டாலினின் முடிவு?
சென்னை: பொன்முடி மீதான வழக்கு பதிவில், திமுகவே கடுப்பாகி உள்ளது.. பொன்முடி தரப்பும் டென்ஷனாகி உள்ளது. இந்நிலையில், இதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறையால் தொடரப்பட்ட, சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி பெரும் சிக்கலுக்கு ஆளானார். பொன்முடி எந்நேரமும் கைது செய்யப்படுவார், அவரை தொடர்ந்து பொன்முடியின் மகன் கைதாவார் என்றெல்லாம் செய்திகள் பரபரத்த நிலையில், 2 நாள் விசாரணைக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.

சிக்கல்கள்: அதேபோல, கடந்த திமுக ஆட்சியின் போது வருமானத்திற்கு அதிகமாக 1 கோடியே 36 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்து சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக பொன்முடி மீதும் அவரது மனைவி விசாலாட்சி மீதும் அதிமுக ஆட்சிக்காலத்தில் வழக்கு தொடரப்பட்டது. விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து, கடந்த நவம்பர் 7ம் தேதி முதல் வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்திலிருந்து வேலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.. அந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், இந்த வழக்கில் இருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டார்..
அதிரடி தீர்ப்பு: போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினாலும், வழக்கில் முகாந்திரம் இல்லை என்றும் கூறி, பொன்முடியையும் அவரது மனைவி விசாலாட்சியையும் விடுதலை செய்வதாக நீதிபதி நீதிபதி வசந்த லீலா, கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி தீர்ப்பளித்திருந்தார். நீதிபதியின் இந்த உத்தரவானது, பொன்முடி தரப்புக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.. பொன்முடியும், மறுநாளே ஃபார்முக்கு வந்துவிட்டார்.. அடுத்தடுத்த அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, தன் பணிகளையும் தொடர ஆரம்பித்துவிட்டார்.
ஆனால், இப்போது மறுபடியும் பொன்முடிக்கு சிக்கல் எழுந்துள்ளது. இந்த கேஸை மறுபடிக்கும் கையில் எடுக்க போகிறார்கள்.. கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் அப்பீல் எதுவும் செய்யப்படாமலேயே இருந்த நிலையில், சென்னை ஹைகோர்ட்டின் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாகவே முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க உள்ளதால் பரபரப்பு கிளம்பி உள்ளது.
பொன்முடி: இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதி, "இந்த வழக்கை ஏன் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளேன் என்பது குறித்து 17 பக்க உத்தரவை பிறப்பித்துள்ளேன். இதுவரை நான் பார்த்ததில், மிக மோசமான முறையில் விசாரிக்கப்பட்டதால்தான் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளேன்.
எனவே, இந்த மனு தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறை, அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிடுகிறேன்" என்று வழக்கின் விசாரணையை செப்டம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, பொன்முடி வழக்குதொடர்பாக, ஒரு பிரத்யேக தகவல் நமக்கு கிடைத்துள்ளது.. பொன்முடிக்கு எதிராக சூ-மோட்டோவாக சென்னை ஹைகோர்ட் மேல்முறையீட்டு வழக்கு பதிவு செய்து விசாரிப்பது என்பது, திமுகவுக்கு எதிராக நடத்தப்படும் ஜுடிசியல் நெருக்கடியாகவே பார்க்கப்படுகிறது.. இதனை தொடர்ச்சியாக அனுமதிப்பது திமுகவுக்கு மட்டுமல்ல, அரசு நிர்வாகத்துக்கும் நெருக்கடிதான் என்கிறார்கள்.
விசாரணைகள்: ஒரு பக்கம் விசாரணை அமைப்புகள் மூலம் நெருக்கடி, மற்றொரு பக்கம் ஜுடிஷியல் நெருக்கடி... அதாவது, மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் இடி என்பது போல மத்திய அரசு நெருக்கடித் தரத்துவங்கியுள்ளது. எனவே, இதனை முதல்வர் கண்டித்து ஒரு அறிக்கை வெளியிடலாம், அதுதான், கட்சிக்காரர்களுக்கு துணிச்சலைத் தரும்.. இல்லாவிட்டால், மூத்த தலைவர்கள் கூட சைலண்ட்டாகி விடுவார்கள்" என்று திமுக வழக்கறிஞர்கள் தரப்பில் விவாதிக்கப்பட்டு வருகிறதாம்.
இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், தீர்ப்பளித்த ஒரு வழக்கில், தாமாகவே முன் வந்து விசாரணைக்கு தற்போது எடுக்க வேண்டியது ஏன்? அதற்கான அவசியம் இப்போது ஏன் வந்தது? முடிந்துபோன வழக்கை மீண்டும் கிளற என்ன காரணம்? என்ற சந்தேகங்கள் இணையத்தை வட்டமிட்டு கொண்டிருக்கின்றன..
திமுக ஆதங்கம்: ஒருவேளை, இந்த வழக்கின் தீர்ப்பு முறையாக வழங்கப்படவில்லையா? அதனால்தான் மறுபடியும் இன்று விசாரிக்க உள்ளதா? என்றும் தெரியவில்லை.. எனினும், சரியான நீதி, சரியான தீர்ப்பு ஒன்றே நோக்கம் என்றால், அதிமுக காலத்திலும் நடந்த வழக்குகளை இப்படி விசாரித்தால் நல்லா இருக்குமே என்ற ஆதங்கமும் திமுக பக்கம் பரவலாக எழுகிறது.












Click it and Unblock the Notifications