லிஃப்ட் கண்ணாடியை பார்த்து தலைமுடியை சரி செய்துகொண்ட பொன்முடி! அமலாக்கத்துறை அலுவலகத்தில் ருசிகரம்!
சென்னை: அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான அமைச்சர் பொன்முடி, அங்கிருந்த லிஃப்டில் ஏறிய போது அதிலிருந்து கண்ணாடியில் பார்த்து தனது தலைமுடியை சரிசெய்து கொண்டார்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பாக விசாரணைக்கு ஆஜராகும் போது தலைமுடி கலைந்துவிடக் கூடாது என்பதில் அமைச்சர் பொன்முடி கவனமுடன் இருந்தது இதன் மூலம் தெரியவந்தது. அதுமட்டுமல்ல விசாரணை என்றவுடன் தாம் ஒன்றும் பம்மி பயந்துகொள்ளவில்லை என்பதையும் கேசுவலாக தான் இருக்கிறேன் என்பதையும் ஊடகங்களுக்கு உணர்த்தும் வகையில் அவர் தலைமுடியை டச் அப் செய்து கொண்டார்.

சைதாப்பேட்டை இல்லத்திலிருந்து ஒரே காரில் பொன்முடியும், அவரது மகன் கவுதம சிகாமணியும் அமலாக்கத்துறை அலுவலகம் சென்றனர். அங்கே அப்பாவை ஒரு அறையிலும், மகனை ஒரு அறையிலும் அமர வைத்து விசாரணை நடத்தினர். பிறகு என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, அவர்கள் இருவரையும் ஒரே அறையில் அமர வைத்து கேள்விக்கணைகளை வீசி வருகின்றனர்.
மேலும், அமைச்சர் பொன்முடியுடன் வந்த வழக்கறிஞர் ஒருவரையும், மருத்துவரையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கவில்லை. நேற்று நள்ளிரவு வரை 7 மணி நேரம் பொன்முடியிடம் விசாரணை நடைபெற்றதன் அடிப்படையில் இன்று அவருக்கு சொந்தமான ரூ.42 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இது அமைச்சர் பொன்முடி தரப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே கையில் சில ஆவணங்களுடன் இன்று விசாரணைக்கு ஆஜராகியிருந்தார் கவுதம சிகாமணி எம்.பி. விழுப்புரத்திலிருந்து வந்துள்ள அமைச்சர் பொன்முடி ஆதரவாளர்கள் அவரது சைதாப்பேட்டை இல்லத்தின் முன் குவிந்துள்ளனர். சொத்துக்களை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளதால் இன்னும் ஓரிரு மணி நேரத்தில் விசாரணை முடிக்கப்பட்டு அமைச்சர் பொன்முடி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications