அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்! நான் எம்எல்ஏ உள்ளே விடுங்க! ஹோட்டல் ஊழியரிடம் எகிறிய பூவை ஜெகன்!
சென்னை: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த பூவை ஜெகன் மூர்த்தியை ஹோட்டல் ஊழியர் ஒருவர் தடுத்து நிறுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹலோ நான் எம்.எல்.ஏ.ங்க என அந்த ஹோட்டல் ஊழியரிடம் பூவை ஜெகன் மூர்த்தி எகிறிய பின்பே அவர் கூட்டம் நடைபெறும் பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டார்.
யார் எம்.எல்.ஏ., யார் கட்சி தொண்டர் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் கிரவுன் நட்சத்திர விடுதி ஊழியர்கள் திண்டாடியதை காண முடிந்தது.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள்
நாளை ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்றது. அதில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரை கட்சித் தொண்டர்கள் உற்சாகம் பொங்க ஹோட்டல் நுழைவு வாயிலில் நின்று வரவேற்றனர். கட்சி அலுவலகத்தில் கிடைக்கும் வரவேற்புக்கு சற்றும் குறைவில்லாமல் ஹோட்டலில் வரவேற்புகள் கொடுக்கப்பட்டன.

பூவை ஜெகன்மூர்த்தி
இதனிடையே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் நட்சத்திர விடுதிக்கு வந்த கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தி லிஃப்டை தவிர்த்து படிக்கட்டுகளில் ஏறி மாடிக்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்ற ஹோட்டல் அலுவலர் ஒருவர் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. என்பது தெரியாமல் எங்க போறீங்க சார், நில்லுங்க என அவர் மீது கை வைத்து நிறுத்தினார்.

நான் எம்.எல்.ஏ
vஇதனால் டென்ஷன் ஆன பூவை ஜெகன் மூர்த்தி, 'ஹலோ நான் எம்.எல்.ஏ.ங்க' ஒரு எகிறு எகிறினார். இதையடுத்து பதறிப்போன அந்த ஹோட்டல் அலுவலர் பூவை ஜெகன் மூர்த்தியை மாடிக்கு அனுப்பி வைத்தார். இதேபோல் பல எம்.எல்.ஏ.க்களை அடையாளம் தெரியாத நட்சத்திர விடுதி அலுவலர்கள் அவர்களை விசாரித்து கூட்டம் நடைபெறும் பகுதிக்கு அனுப்பி வைத்ததை காண முடிந்தது.

திண்டுக்கல் சீனிவாசன்
இதனிடையே பொருளாளர் என்பதாலோ அல்லது தங்களுடைய ஹோட்டல் பில்லை செட்டில் செய்யக்கூடியவர் என்பதாலோ தெரியவில்லை, திண்டுக்கல் சீனிவாசன் வரும் போது மட்டும் கிரவுன் பிளாசா நட்சத்திர விடுதி மேலாளர் ஓடோடி வந்து கை கொடுத்து உற்சாகமாக வரவேற்றார்.












Click it and Unblock the Notifications