திடீரென ஒலித்த தேவாலய மணிகள்.. போப் பிரான்சிஸ் மரண செய்தி இந்தியாவில் வெளியான அந்த தருணம்
சென்னை: கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்கள் இன்று தனது 88வது வயதில் காலமானார். வாட்டிகனில் இன்று காலை 7:35 மணிக்கு (உள்ளூர் நேரம்) போப் உயிர் பிரிந்ததாக வாட்டிகனின் அப்போஸ்தலிக்க சேம்பர் கேமராலங்கோ கார்டினல் கெவின் ஃபாரெல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். போப் அவர்கள் 'பிதாவின் வீட்டிற்குத் திரும்பிவிட்டார்' என்று அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.
போப் பிரான்சிஸ் மறைந்த செய்தி உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான கத்தோலிக்கர்களை பெரும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், பிலிப்பைன்ஸ் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர், ஆயர் பாப்லோ விர்கிலியோ கார்டினல் டேவிட், நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் போப் மறைவுக்காக துக்க மணி அடித்து, அவருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.

இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களிலும் இன்று பிற்பகலில், போப் பிரான்சிஸ் மறைந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து மணி ஓசை எழுப்பப்பட்டது. வழக்கமாக இல்லாத நேரத்தில் ஒலித்த இந்த மணி ஓசை பலரின் கவனத்தை ஈர்த்தது. திடீரென ஏன் தேவாலய மணி அடிக்கிறது என புரியாமல் குழம்பிய பலரும், பின்னர் செய்தி இணையதளங்கள் மற்றும் பிற ஆதாரங்களில் போப் பிரான்சிஸ் காலமான செய்தியை அறிந்து கொண்டனர்.
பலருக்கும் அதிகாரப்பூர்வ செய்தி வருவதற்கு முன்பே, தங்கள் பகுதியின் தேவாலயங்களில் ஒலித்த துக்க மணிகளின் வழியாகவே இந்த சோகச் செய்தி முதலில் தெரிய வந்தது ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வாக அமைந்தது. இது டிஜிட்டல் யுகத்திலும் பாரம்பரியமான மணி ஓசை ஒரு முக்கிய அறிவிப்பு சாதனமாகவும், சமூகத்தின் துக்கத்தை வெளிப்படுத்தும் அடையாளமாகவும் இருப்பதைக் காட்டியது.
தேவாலய மணிகள் பொதுவாக மகிழ்ச்சியான நிகழ்வுகளுக்கும், குறிப்பிட்ட சபையைச் சேர்ந்த யாராவது மரணித்தாலோ, வழிபாட்டு நேரங்களுக்கும் ஒலிக்கும் வழக்கம் கொண்டது. ஆனால், ஒரு முக்கிய ஆன்மீக தலைவர் குறிப்பாக போப் போன்ற தலைவர் காலமாகும் போது ஒலிக்கும் துக்க மணி ஓசை, சமூகத்திற்கு ஒரு சோகமான செய்தியை அறிவித்து, மக்களை பிரார்த்தனைக்கு அழைக்கும் பாரம்பரிய முறையாகும். இது ஒரு சகாப்தத்தின் முடிவை குறிக்கிறது.
இந்தியாவில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களும், தங்கள் தேவாலயங்களில் ஒலித்த மணிகளின் எதிரொலியாக, போப் பிரான்சிஸ் அவர்களின் ஆன்மா இறைவனடி சேர உருக்கமாக பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். அவர்களின் தேவாலயங்களில் ஒலித்த மணிகள், உலகளாவிய கத்தோலிக்க குடும்பத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் ஆழ்ந்த துக்கத்தையும் மரியாதையையும் வெளிப்படுத்தியது. போப் பிரான்சிஸ் ஆற்றிய சேவைகள் மற்றும் அவர் உலகிற்கு விட்டுச் சென்ற அமைதி மற்றும் நல்லிணக்கச் செய்திகள் என்றும் நினைவுகூரப்படும்.
இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகையை நேற்று கொண்டாடிய போப் பிரான்சிஸ், சரியாக அதற்கு மறுநாள், மண்ணுலகை விட்டு பிரிந்து சென்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications