பொன்மகன் சேமிப்பு திட்டம்! மகனை லட்சாதிபதியாக்கும் அருமை பாலிசி! கனவை நனவாக்கும் பொன் மகன் 7% வட்டி
சென்னை: பொன்மகன் சேமிப்பு திட்டம் உங்கள் வீட்டு வருங்காலத் தூண்களான ஆண் குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் இதர தேவைகளுக்காகச் சேமிக்க விரும்பும் ஒவ்வொரு பெற்றோருக்கும் இந்தத் திட்டம் ஒரு வரப்பிரசாதமாகும். தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்காகச் செயல்படுத்தப்படும் 'செல்வமகள் சேமிப்புத் திட்டம்' எந்தளவுக்குப் புகழ்பெற்றதோ, அதேபோல ஆண் குழந்தைகளுக்காக அஞ்சலகங்களில் செயல்படுத்தப்படும் ஒரு மிகச்சிறந்தத் திட்டம்தான் 'பொன்மகன் பொதுவைப்பு நிதித் திட்டம்'. இந்த திட்டத்தின் செயல்பாடுகள், வட்டி விகிதங்கள் என்னென்ன? பெரும்பாலானோர் இந்த திட்டத்தை விரும்ப காரணம் என்ன?
பொதுவாக சேமிப்பு என்றாலே அது பெண் குழந்தைகளுக்கானது மட்டும்தான் என்ற ஒரு எண்ணம் மக்களிடையே நிலவுகிறது. ஆனால் பொன்மகன் சேமிப்புத் திட்டம் ஆண் குழந்தைகளின் வளமான எதிர்காலத்துக்கு உதவக்கூடியது.

லாபம் & நுணுக்கமான வசதிகள் என்னென்ன
10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் பெயரில் பெற்றோர்கள் இக்கணக்கைத் தொடங்கலாம். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை உங்கள் வசதிக்கேற்பச் சிறுகச் சிறுகச் சேமிக்க முடியும். இது மத்திய அரசின் நேரடித் திட்டம் என்பதால் உங்கள் பணத்திற்கு 100 சதவீதம் பாதுகாப்பு உண்டு. சந்தை அபாயங்கள் ஏதுமில்லாத இந்தத் திட்டம், நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு மிகச்சிறந்த முதலீட்டு வாய்ப்பாகும்.
இந்த திட்டத்திற்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை மாற்றியமைக்கும். இப்போது இது சுமார் 7% முதல் 8% என்ற அளவில் உள்ளது.
வட்டி விகிதம் - முதலீட்டு தொகை
இதில் ஒரு முக்கியமான நுணுக்கம் என்னவென்றால், ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்கு முன்பாகவே நீங்கள் பணத்தைச் செலுத்திவிட்டால், அந்த முழு மாதத்திற்குமான வட்டியைப் பெற்றுவிடலாம்.
மேலும், இதற்கு EEE (Exempt-Exempt-Exempt) என்ற அந்தஸ்து உண்டு. அதாவது, நீங்கள் முதலீடு செய்யும் தொகை, அதற்கு வளரும் வட்டி மற்றும் முதிர்வுக்குப் பின் கிடைக்கும் மொத்தத் தொகை என மூன்றுக்குமே ஒரு பைசா கூட வரி கட்டத் தேவையில்லை.
15 ஆண்டுகாலத் திட்டம் என்றாலும், உயர்கல்வி அல்லது மருத்துவ அவசரத் தேவைகளுக்காக குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கை முடித்துக்கொள்ளும் வசதியும் உண்டு.
வாரிசுதாரர் - ஜாயிண்ட் அக்கவுண்ட்
அதுமட்டுமல்ல, கணக்கில் உள்ள தொகையை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கடன் பெறும் வசதியும் இதில் உள்ளது. இத்திட்டத்தில் கூட்டுக் கணக்கு (Joint Account) தொடங்க முடியாது, ஆனால் வாரிசுதாரரை (Nominee) நியமித்துக்கொள்ளலாம்.
நீங்கள் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு மாறினால், உங்கள் கணக்கை ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றொன்றுக்கோ அல்லது வங்கிப் பிரிவிற்கோ எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.
15 ஆண்டுகள் முடிந்த பிறகு, மேற்கொண்டு முதலீடு செய்தோ அல்லது முதலீடு செய்யாமலோ 5 ஆண்டுத் தொகுப்புகளாகக் கணக்கை நீட்டித்துக்கொள்ள முடியும். பணத்தை வீணாக்காமல் கட்டாயச் சேமிப்பைத் தூண்டும் இந்தத் திட்டம் உங்கள் மகனின் எதிர்காலக் கனவுகளுக்கு ஒரு மிகப்பெரிய நிதியாதாரமாக அமையும்.












Click it and Unblock the Notifications