எட்டப்பர்களை பந்தாடும் எடப்பாடியாரே.. EPS விரிவாக்கமே வேறயாம்? சென்னையில் பரபரக்கும் போஸ்டர்
"கழகத்தின் மூன்றாவது அத்தியாயமே! இலையை தாங்கும் கிளையே! அறிவாலயத்தை கலங்கடிக்கும் அறிவாயுதமே!" என்று குறிப்பிட்டு உள்ளனர்.
சென்னை: எடப்பாடி பழனிசாமியை பாராட்டியும், ஓ பன்னீர்செல்வத்தை கடுமையாக சாடியும் சென்னையின் முக்கிய பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் ஒட்டி இருக்கும் போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை மயிலாப்பூர் வடக்கு பகுதி அதிமுகவை சேர்ந்த எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் அம்மா கோபி சென்னை மயிலாப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் போஸ்டர்களை அடித்து ஒட்டி இருக்கிறார்.
அதில், EPS என்பதற்கு புதுவிதமான விரிவாக்கம் எழுதப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி என்பதை சுருக்கி ஈபிஎஸ் என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில், அதற்கு Empathetic (கருணை), Powerful (சக்தி வாய்ந்த), Sagacious (சாதுரியம்) என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

எடப்பர்களை பந்தாடிய எடப்பாடி
அதேபோல், "கழகத்தின் மூன்றாவது அத்தியாயமே! இலையை தாங்கும் கிளையே! அறிவாலயத்தை கலங்கடிக்கும் அறிவாயுதமே! உதிர்ந்த ரோமங்களை ஊதித்தள்ளிய உத்தமரே! அம்மாவின் அரசியல் வாரிசே! எடப்பர்களை பந்தாடும் எடப்பாடியாரே! எங்கள் பொதுச்செயலாளரே! தங்களை வணங்கி மகிழ்கிறோம்.." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

கவனம் ஈர்த்த போஸ்டர்
இந்த போஸ்டர்கள் காலை முதல் சென்னை வாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக இதனை படம் பிடித்து பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளார்கள். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையிலான தலைமைக்கான போட்டி தொடர்ந்து வரும் நிலையில் இதுபோன்ற போஸ்டர் யுத்தங்களும் இரு தரப்பினர் மத்தியில் அதிகரித்து உள்ளன.

இடைக்கால பொதுச்செயலாளர்
அதிமுகவில் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் இடையிலான ஒற்றைத் தலைமை பிரச்சனை வெடித்தது. அதை தொடர்ந்து கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டு எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார்.

மாறி மாறி தீர்ப்புகள்
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கைஉ விசாரித்த உயர்நீதிமன்றம் ஜூலை 11 அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு சாதகமாக தீர்ப்பு அளித்தது. அதை தொடர்ந்து பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி தரப்பு கூட்டிய பொதுக்குழு கூட்டம் செல்லும் உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. இதனை தொடர்ந்து வரும் மார்ச் 26 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடத்தப்பட்டு 27 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று அக்கட்சித் தலைமை அறிவித்தது.

முடிவை அறிவிக்க தடை
இதனை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.ரமேஷ் பாபு, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நிறுத்த விரும்பவில்லை என்பதால் தேர்தல் நடைமுறைகளை தொடரலாம் எனவும், அதே நேரம் முடிவை அறிவிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டார்.

பொதுக்குழு வழக்கு
அதே நேரம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட்டு வருகிறது. வரும் மார்ச் 24 ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. அதை வைத்தே கட்சி யாருக்கு என்ற முடிவுக்கு வர முடியும்.












Click it and Unblock the Notifications