பல இடங்களில் கரண்ட் இல்லை.. சென்னையில் மின் வினியோகம் எப்போது சீராகும்.. தங்கம் தென்னரசு பரபர பதில்
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாகப் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், மின் வினியோகம் எப்போது சீரடையும் என்பது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாகக் கடந்த இரண்டு நாட்களாகச் சென்னை மற்றும் அண்டைய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கியது. கடல் கொந்தளிப்பால் மழை நீர் வடிவதிலும் சிரமம் ஏற்பட்டது.

இன்று காலை பல முக்கிய சாலைகளில் மழை நீர் வடியத் தொடங்கியது. இதனால் சென்னையில் படிப்படியாக மின் வினியோகம் சீரழிந்து வருகிறது. இதற்கிடையே அமைச்சர் தங்கம் தென்னரசு இது குறித்து விளக்கியுள்ளார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சென்னையில் மின் வினியோகத்தைச் சீரமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ஒரே பகுதியில் ஒரு இடத்தில் நீர் தேங்கி இருக்கிறது. மற்றொரு இடத்தில் நீர் தேங்கவில்லை என்ற சூழலே இருக்கிறது. அதுபோன்ற இடங்களில் எங்கெல்லாம் மழை நீர் தேங்கவில்லையோ.. அங்கெல்லாம் மட்டும் மின் வினியோகத்தை மீண்டும் வழங்கி வருகிறோம்.
எங்கேயும் முழுமையாக மின் இணைப்பு துண்டிக்கப்படவில்லை. பகுதி பகுதியாகப் பிரித்து நீர் தேங்கி இருக்கும் இடங்களில் மட்டுமே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. துணை மின் வாரியம் வாரியாக ஆய்வுகளை மேற்கொண்டு மிக வேகமாக மின் இணைப்பை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இன்று மாலைக்குள் மின் வினியோகம் சீரடையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
எப்போது மின்சாரம் வரும்: மற்ற மாவட்டங்களில் இருந்தும் பணியாளர்களை அழைத்துள்ளோம். 1100க்கும் மேற்பட்டோர். தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து ஊழியர்களை மீட்புப் பணிகளை அழைத்துள்ளோம். சப் ஸ்டேஷன் வாரியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மின் பாதையில் இருக்கும் மின்னூட்டங்களை முதலில் சரி செய்துவிட்டு, அதன் பிறகு கீழே இருக்கும் அனைத்து இடங்களிலும் மின்சாரம் வழங்கப்படும். இன்று மாலைக்குள் அனைத்து இடங்களிலும் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
உரிய நடவடிக்கை: மின்சார உற்பத்தி நிலையங்களைப் பொறுத்தவரை அதில் எந்தவொரு பாதிப்பும் இல்லை. வடசென்னையில் இருக்கும் மின்சார உற்பத்தி நிலையங்களில் பாதிப்பு இல்லை.. சில இடங்களில் டிரான்ஸ்பார்மர்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பிரச்சினைகளைச் சரி செய்யவும் பணியாளர்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எங்கெல்லாம் மின்சாரம் இல்லை எனப் புகார்கள் வருகிறதோ.. அதை வைத்து உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
முதலில் மின் பாதைகளைச் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. நகரில் இருக்கும் 1877 பாதைகளில் 1203 பாதைகள் முழுமையாகச் சீரமைக்கப்பட்டு உள்ளது. வேளச்சேரியிலும் கூட ஒரு பகுதியில் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மழை நீர் அதிகம் தேங்கி இருக்கும் பகுதிகள் மட்டும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மழை நீர் இருக்கும் பகுதிகளில் மின்சாரம் வழங்கினால் வேறு பிரச்சினைகள் ஏற்படும் என்பதாலேயே மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
மின் இணைப்பு துண்டிப்பு ஏன்: பிரச்சினை இல்லாத பகுதிகளில் மின் இணைப்பு ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளன. நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது மின் பயன்பாடு அதிகரித்துள்ளது.. இது மின் வினியோகம் சீரடைந்து வருவதையே காட்டுகிறது.. மக்களின் பாதுகாப்பு கருதியே மழை நீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் மின் கம்பங்கள் அனைத்தும் புதைக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளதால் அந்த பாதிப்பு இல்லை. ஆனால் திருவள்ளூரில் மின் கம்பங்களில் பாதிப்பு ஏற்படலாம். அதைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கிறோம்.. சென்னையைப் பொறுத்தவரைத் தாழ்வான பகுதிகளில், குறிப்பாகப் புறநகர்ப் பகுதிகளில் தான் மின் இணைப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
நகரில் பல முக்கிய இடங்களில் ஏற்கனவே மழை நீர் வடிந்துவிட்டது. பல முக்கிய துறைகளுடன் இணைந்து மின் இணைப்பை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தண்ணீர் அதிகம் தேங்கி இருக்கும் பகுதிகளில் மட்டுமே மின்சாரம் வழங்கப்படவில்லை. தமிழ்நாடு அரசு மேற்கொண்டு பணிகள் காரணமாகவே இந்தளவுக்கு மழை பெய்த போதிலும் பெரியளவில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications