'வெதர்மேன்' பெயர் எதுக்கு.. கொந்தளித்த எஸ்.ஆர்.சேகர்! பிரதீப் ஜானின் இந்த பதிலடியை எதிர்பார்க்கலையே!
சென்னை: வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியிருக்கிறது. இது மேலும் வலுப்பெற்று புயலாக உருமாற இருக்கிறது. இந்நிலையில் 'வெதர்மேன்' எனப்படும் தனியார் வானிலை ஆர்வலர் குறித்து தமிழக பாஜக தலைவர் எஸ்.ஆர்.சேகர் விமர்சித்துள்ளார். இதற்கு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிலடி கொடுத்திருக்கிறார்.
இந்தியாவில் வானிலை மாற்றங்களை கணிக்க நவீன வசதிகள் கொண்ட தொழில்நுட்பங்கள் தேவைப்படுகிறது என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். ஒகி புயல் தொடங்கி கடைசியாக திருநெல்வேலி, தூத்துக்குடியில் பெய்த கனமழை வரை, வானிலை முன்கூட்டியே சரியாக கணிக்கப்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.

மறுபுறம் தனியார் வானிலை ஆர்வலர்கள் வெதர் குறித்த அப்டேட்களை கொடுத்து வருகின்றனர். இந்த அப்டேட்கள் சாமானிய மக்களுக்கு புரியும் வகையில் எளிமையாக இருப்பதால் தனியார் வானிலை ஆர்வலர்களுக்கு வரவேற்பு இருக்கிறது.
குறிப்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானின் அப்டேட்கள் பெரும் அளவில் கவனம் பெற்று வருகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு குறித்து அவர் கொடுக்கும் அப்டேட்கள் பெரும் அளவில் துல்லியமானதாகவே இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். ஆனால், மறுபுறம் இவர் மீது விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன. பாஜக ஆதரவாளரான மாரிதாஸ், பிரதீப் ஜானின் பெயரை குறிப்பிடாமல், வெதர்மேன் என்று எழுதி கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதனையடுத்து பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரும் விமர்சித்துள்ளார். அதாவது, "தமிழ்நாட்டின் மிகவும் பரபரப்பானவராக அறியப்படும் வெதர்மேனால், ஒருவார காலத்திற்கு மேல் வானிலையின் நிலவரத்தை கணிக்க முடியாது. எனவே வெதர்மேன் என்பதற்கு பதிலா வெதர் ரிப்போர்ட்டர் என தனது பெயரை மாற்றிக்கொள்ளட்டும்" என்று கூறி, திறமையான வானிலை கணிப்பாளர்கள் என்று குறிப்பிட்டு இரண்டு ஐடிகளை தனது x தளத்தில் பதிவிட்டிருந்தார்.
மட்டுமல்லாது, "பழமையான அமைப்புகளுடன் திறமையை கொண்டவர்களை ஊக்குவிப்பது இடதுசாரி கண்ணோட்டம் கொண்ட ஊடகங்களுக்கு ஒவ்வாமையானதாக உள்ளது" என்றும் விமர்சித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார். அதில், "அவசரமாக ட்வீட் போடுவதை விட தெளிவுக்காக காத்திருப்பது நல்லது. இங்கு எல்லா பயனர்களுக்கும் யாரை ஃபாலோ செய்ய வேண்டும்/வேண்டாம் என்கிற உரிமை உள்ளது. ஒருவேளை நான் மிகைப்படுத்தப்பட்ட அப்டேட்களை கொடுக்கிறேன் என்றால், யார் சரியான தகவலை கொடுக்கிறார்களோ மக்கள் அவர்களை ஃபாலோ செய்து சென்றுவிடுவார்கள்.
நீங்கள் சொல்வதை பார்த்தால், இந்திய வானிலை ஆய்வு மையம் 5 நாட்களுக்கான அப்டேட்களை மட்டுமே கொடுக்கிறது. அதை மூடிவிடலாமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வாதங்களுக்கு பல்வேறு பயனர்களும் தங்கள் ஆதரவையும்/எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications