பள்ளியில் உயிரிழந்த மாணவன்.. நடந்தது என்ன? முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல்! பரபர தகவல்
சென்னை: தனியார்ப் பள்ளியில் மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், முதல்கட்ட விசாரணை அறிக்கையை முதன்மை கல்வி அதிகாரி தாக்கல் செய்தார்.
Recommended Video
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் பெங்களூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், இவரது மகன் தீக்சித் ஆழ்வார் திருநகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் தீக்சித் பள்ளி பேருந்தில் பள்ளிக்குச் சென்றுள்ளார். மாணவர் வீட்டில் இருந்து கிளம்பிய சற்று நேரத்திலேயே, அவரது தாயாரைத் தொடர்பு கொண்ட பள்ளி நிர்வாகம் மாணவருக்கு விபத்து ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

விபத்து
பேருந்தில் தீக்சித் ஏதோ ஒரு பொருளைத் தவறிவிட்டதாகவும் அதை எடுக்க மீண்டும் பேருந்தில் ஏற முயன்ற போது, தவறி விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. படுகாயமடைந்த தீக்சித்தை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்க முயன்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே மாணவர் தீக்சித் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மறுப்பு
இதையடுத்து அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை கைது செய்தனர். இருப்பினும், பள்ளியின் தாளாளரைக் கைது செய்யும் வரை, உயிரிழந்த மாணவர் தீக்சித் உடலை வாங்க மாட்டோம் என்று பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர்.

பெற்றோர்
இதையடுத்து சிறுவனின் பெற்றோரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னரே, மாணவர் தீக்சித் உடலைப் பெற்றோர் வாங்கச் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து செவ்வாய் காலை 11 மணி அளவில் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்குத் தமிழக அரசு உத்தரவிட்டது.

கவனக்குறைவு
இதனிடையே, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தனியார்ப் பள்ளியில் ஆய்வு செய்த விசாரணையின் முதல்கட்ட அறிக்கையைப் பள்ளிக் கல்வித் துறையிடம் சமர்ப்பித்தார். அந்த பள்ளிக்குக் கொடுக்கப்பட்ட நோட்டீஸூக்கான விளக்கமும் இன்று கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்ட விசாரணையில் ஓட்டுநர் கவனக்குறைவாகச் செயல்பட்டது தெரிய வந்துள்ளது, அதுமட்டுமின்றி இந்த நிகழ்வின் போது சம்பந்தப்பட்ட பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பள்ளியில் இல்லாததும் ஒரு காரணம் என்று விசாரணையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications