காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி... தேர்தல் வேலைகளை உடனே தொடங்க பிரேமலதா உத்தரவு
தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே தான் உள்ளது, அதனால் யாருக்காக காத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ள பிரேமலதா உடனடியாக தேர்தல் வேலைகளை தொடங்கினால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
சென்னை: காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி என்று விஜயகாந்த் ஒரு படத்தில் பாடியிருப்பார். இப்போது தேமுதிகவின் நிலையும் அப்படித்தான் உள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னமும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் கூட்டணி பேச்சு வார்த்தை இறுதி செய்யாமல் எந்த தொகுதி என்றும் முடிவு செய்யாமல் திரிசங்கு நிலையில் உள்ளது தேமுதிக. 41 தொகுதி வேண்டும் என்று தேமுதிக உடும்பு பிரியாக நிற்பதால் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு யாருமே கூப்பிடவில்லை. இனியும் பொறுத்திருக்க வேண்டாம் தேர்தல் பணிகளை தொடங்கினால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று கூறியுள்ளார் பிரேமலதா.
Recommended Video
தேமுதிக கட்சி தொடங்கி 16 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. முதலில் தனித்து களம் கண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பலத்தை நிரூபித்தார். 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் தோல்வியை தட்டி விட்டது தேமுதிக. இதனையடுத்து 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே விரும்பின.
திமுகவை எதிர்த்து கட்சி ஆரம்பித்த விஜயகாந்த் அந்த கட்சியுடன் கூட்டணி சேர விரும்பவில்லை. நல்ல வாய்ப்பை நழுவ விடாமல் விஜயகாந்த் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார் ஜெயலலிதா. 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. தேமுதிக எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தது. திமுக படுதோல்வி அடைந்தது.
அதிமுக தேமுதிக விரிசல்
அதிமுக தேமுதிக கூட்டணி சில ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. சட்டசபையில் நடந்த தகராறை தமிழகமே அறியும். இதனைத் தொடர்ந்து 2016 சட்டசபைத் தேர்தலில் எந்த கூட்டணியும் இன்றி 234 தொகுதிகளிலும் தனித்து களம் கண்டது அதிமுக. உதிரி கட்சி தலைவர்கள் சிலருக்கு இரட்டை இலையில் போட்டியிட வாய்ப்பு கொடுத்து எம்எல்ஏ ஆக்கினார் ஜெயலலிதா.
முதல்வர் வேட்பாளர்
அந்த தேர்தலில் தேமுதிக, மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினர் மக்கள் நலக்கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். விஜயகாந்த் உட்பட 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக
2019ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. அதே கூட்டணி தற்போதைய சட்டசபைத் தேர்தலிலும் நீடிக்கிறது என்று சொல்லப்பட்டாலும் பாஜக அதிமுக கூட்டணி மட்டுமே உறுதியாகியுள்ளது.
தேமுதிக அடம்
தேமுதிக 41 தொகுதிகள் வேண்டும் என்று உறுதியாக இருப்பதால் கூட்டணி இதுவரைக்கும் இறுதி செய்யப்படாமலேயே உள்ளது. தனித்து போட்டியிடவும் தயங்க மாட்டோம் என்று அவ்வப்போது பிரேமலதா கூறி வருகிறார். விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனும் அவ்வப்போது தனித்து போட்டியிடுவது பற்றி பேசி வருகிறார்.
பிரேமலதா பேட்டி
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் தேமுதிக மாவட்ட துணை செயலாளர் வெங்கடேசன் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரேமலதா, தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே தான் உள்ளது, அதனால் யாருக்காக காத்திருக்க வேண்டும் அதனால் எந்த பலனும் இல்லை விரைவில் தேர்தல் பணிகளை தொடங்கினால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் தேர்தல் பணிகளை தொடங்க கால தாமதம் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
பொறுத்திருந்து பார்ப்போம்
ஆண்டுதோறும் பட்ஜெட் வெளியிடப்பட்டு கொண்டிருக்கிறது அந்த பட்ஜெட் முறையாக மக்களுக்கு போய் சேர்கிறதா என்பதை யாரும் கவனிப்பதில்லை. பட்ஜெட்டில் நிறைகளும் குறைகளும் இணைந்த ஒரு பட்ஜெட்டாக உள்ளது. சாதகங்கள், பாதகங்கள், இருக்கின்றன. பட்ஜெட் அறிவிப்பு குறித்து பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எப்படி செயல் திட்டமாக கொண்டு வருகிறார்கள் இது எப்படி மக்களுக்கு போய் சேருகிறது பலன் அளிக்கிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
சசிகலா வருகை
விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள், விவசாயிகளுக்கு நிரந்தர தீர்வை கண்டு விவசாயிகளுக்கு எந்த ஒரு குறைகளும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சசிகலா தமிழகத்திற்கு வரும்பொழுது அரசியலில் எந்த மாதிரியான மாற்றம் ஏற்படும் என்பதை பார்க்க நானும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.
தேமுதிக காத்திருப்பு
சட்டசபைத் தேர்தல் நடைபெறும் போது தேமுதிகவின் முடிவுக்காகத்தான் பலரும் காத்துக்கொண்டிருப்பார்கள். இப்போது முக்கிய கட்சிகள் கூட்டணிக்கு அழைப்பார்களா என்று காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதுதான் காலத்தின் கோலம். அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுமா? தனித்து களமிறங்குமா பார்க்கலாம்.