திமுக பாணியில் செயல் தலைவர் பதவியை உருவாக்குகிறதா தேமுதிக?.. இனி விஜயகாந்த் இடத்தில் பிரேமலதா?
சென்னை: தேமுதிகவில் விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால் செயல்தலைவர் பதவியை உருவாக்க விரைவில் பொதுக் குழு கூட்டம் கூட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜயகாந்த் ரசிகர்களாக இருந்தவர்கள்தான் அவரது கட்சி தொண்டர்களாகினர் என்பது அனைவரும் அறிந்ததே. விஜயகாந்த் ஆக்ட்டிவ்வாக இருந்தவரை கட்சியில் பிசிறு தட்டாமல் பார்த்துக் கொண்டார். தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டார்.
ஆனால் எப்போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதோ அன்று முதல் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்க முடியவில்லை. தேர்தலில் தொடர் தோல்வி, வாக்கு சதவீதமும் குறைந்துவிட்டது. கட்சியிலிலிருந்து முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி மாற்றுக் கட்சிகளில் இணைகிறார்கள்.

நிர்வாகிகள்
எனவே கட்சியில் நிர்வாகிகள் கட்டமைப்பில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என நிர்வாகிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்ததாக தெரிகிறது. ஆனால் இதற்கு பிரேமலதா உள்ளிட்ட விஜயகாந்த் குடும்பத்தினர் பிடி கொடுக்காமல் இருந்து வந்தனர்.

கோரிக்கை
தற்போது மீண்டும் அதுகுறித்த கோரிக்கை எழுந்துள்ளது. அதாவது இன்னும் இரு ஆண்டுகளில் நாடாளுமன்ற தேர்தலும் 4 ஆண்டுகளில் சட்டசபைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தேமுதிக சோபிக்க வேண்டுமானால் தலைமை அளவில் பல மாற்றங்களை செய்ய வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனராம்.

வெற்றி
வரும் தேர்தல்களில் கட்சி நல்லதொரு வெற்றியை பெற்றால் அது விஜயகாந்திற்கு எத்தனை மகிழ்ச்சியை தரும் என யோசித்த பிரேமலதா நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினாராம். அவர்களும் தலைமை நிர்வாகம் அளவில் மாற்றத்தை கொண்டு வரலாம் என்றனராம்.

கட்சி முடக்கம்
விஜயகாந்தால் செயல்பட முடியவில்லை, இதனால் கட்சியும் முடங்கிவிட்டதால் அதிருப்தியில் உள்ள தொண்டர்கள் வேறு கட்சிக்கு தாவாத வண்ணம் இழுத்து பிடிக்கவாவது இதை செய்ய வேண்டும் என நிர்வாகிகள் தெரிவித்தனராம். இதனால் வெகு விரைவில் தேமுதிக பொதுக் குழு கூட்டம் கூட்டப்படும் என தெரிகிறது.

செயல்தலைவர்
அவ்வாறு கூட்டப்படும் பட்சத்தில் செயல் தலைவர் என்ற புதிய பதவி உருவாக்கப்படும் என தெரிகிறது. அது போல் விஜய பிரபாகரனுக்கும் ஏதேனும் முக்கிய பதவிகள் கொடுக்கப்படலாம் என தெரிகிறது. அதாவது திமுக பாணியில் செயல் தலைவர் பதவி உருவாக்கப்படவுள்ளதாம்.

திமுக பாணியில் தேமுதிக
மறைந்த முன்னாள் முதல்வர் திமுக தலைவராக இருந்தவருமான கருணாநிதிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு அவரால் கட்சி பணிகளை கவனித்து கொள்ள முடியாமல் போனதால் மு.க.ஸ்டாலின் செயல் தலைவர் பதவியை ஏற்றார். அவர் கட்சியில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு ஒப்புதல் அளித்தார். அந்த வகையில் பிரேமலதா செயல்தலைவர் ஆனால் விஜயகாந்த் மேற்கொள்ள வேண்டிய கட்சி பணிகளை அவர் மேற்கொள்வார் என தெரிகிறது. ஆனால் விஜயகாந்த் எப்படியும் கட்சியை நடத்த மீண்டும் வருவார் என தொண்டர்கள் எதிர்பார்த்த நிலையில் இந்த செயல்தலைவர் பதவி பேச்சு அடிபட்டதால் மனம் கலங்கியுள்ளனராம். விஜயகாந்த் தலைமைக்கு கட்டுப்பட்டோம், ஆனால் தற்போது தலைமை பொறுப்பை பிரேமலதா வகிக்க உள்ளாரே என கலக்கத்தில் உள்ளனராம். ஏற்கெனவே ஆகஸ்ட் 15 ஆம் தேதியும் ஆகஸ்ட் 25 ஆம் தேதியும் விஜயகாந்தின் உடல்நிலையை கண்டு தொண்டர்கள் மனம் நொறுங்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications