ஆம்புலன்ஸில் விஜயகாந்தின் கன்னத்தில் கைகளை வைத்தபடியே அழுத பிரேமலதா.. முகத்தை பார்த்து கதறல்
சென்னை: விஜயகாந்தின் உடல் கொண்டு வரப்பட்ட ஆம்புலன்ஸில் அவருடைய கன்னத்தில் கை வைத்தபடியே பிரேமலதா விஜயகாந்த் கதறி அழுதார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிமோனியா (நுரையீரல் அழற்சி) காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்துக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் காலமானார்.

இதையடுத்து அவருடைய உடல் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சாலிகிராமம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அவருடைய உடல் அருகே பிரேமலதா விஜயகாந்த் அமர்ந்திருந்தார். விஜயகாந்த் மீது ஒரு போர்வை போர்த்தப்பட்டிருந்தது.
அப்போது பிரேமலதா, விஜயகாந்தின் கன்னத்தில் கை வைத்தபடியே அழுதுக் கொண்டிருந்தார். அவரது உடல் அவருடைய வீட்டை அடைந்த போது தொண்டர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை தொட்டபடிய கதறினர். சிலர் ஆம்புலன்ஸை அடித்து கேப்டன் எழுந்துருங்க என கதறினர். இந்த நிலையில் விஜயகாந்தின் உடல் வீட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
அப்போது தொண்டர்கள் கதறினர். உடனே ஆம்புலன்ஸில் இருந்து இறங்கிய பிரேமலதாவும் கதறியபடியே வந்தார். தொண்டர்களை பார்த்து அவர் துக்கம் தாளாமல் கதறினார். அவரை கட்சி நிர்வாகிகளும் போலீஸாரும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
வீட்டில் வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடலுக்கு பக்கத்தில் நின்றவாறே பிரேமலதா கதறி அழுத காட்சிகள் பார்ப்போர் மனதை கலங்கடித்தது. விஜயகாந்தின் உடல் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடல் அருகே பிரேமலதா, சுதீஷ், கட்சி நிர்வாகி பார்த்தசாரதி உள்ளிட்டோர் நின்று அழுது கொண்டிருந்தனர்.
அவருடைய உடலை பார்த்து பார்த்து கதறினார் பிரேமலதா. விஜயகாந்தின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி ஆறுதல் தெரிவித்தார். அவருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியனும் உடன் வந்திருந்தார். விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இதனால் அவர் கட்சி அலுவலகங்களில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென இருமல், காய்ச்சல். சளி தொந்தரவு ஏற்பட்டது. இதனால் கடந்த மாதம் 18ஆம் தேதி சென்னை கிண்டியை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து அங்கு 14 நாட்கள் கழித்து வீடு திரும்பினார். பிறகு கடந்த 14 ஆம் தேதி தேமுதிக பொதுக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். இதையடுத்து அவர் நேற்று முன் தினம் வழக்கமான உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு கொரோனா சோதனை உறுதியானது. அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளித்த நிலையில் காலமானார்.












Click it and Unblock the Notifications