பார்த்தீங்கல்ல.. விஜயகாந்த் வந்ததுக்கே இப்படி.. "கண்ணோட்டம்தான் காரணம்".. கெத்து காட்டிய பிரேமலதா
திமுகவை விமர்சித்து பேட்டி தந்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த்
சென்னை: முதலமைச்சர் பொறுப்பில் இருப்பவர் இப்படியான செயலில் ஈடுபட கூடாது... எதிர்கட்சியாக இருந்தபோது GO BACK MODI என்றவர்கள் மோடியுடன் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பது என்பது அரசியல் என்று தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் ஆங்கிலப் புத்தாண்டன்று தொண்டர்களை சந்திப்பது விஜயகாந்த்தின் வழக்கம்.. ஆனால், கடந்த ஆண்டு கொரோனா பரவல் தீவிரமாக இருந்த காரணத்தினாலும், உடல்நிலை காரணங்களாலும், தொண்டர்களை அவரால் சந்திக்க முடியவில்லை.
எனவே, புத்தாண்டான இன்று விஜயகாந்த் தொண்டர்கள், மற்றும் நிர்வாகிகளை சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் சந்தித்தார்.. அவர்களுக்கு வாழ்த்து சொன்னார்.. தொண்டர்களின் வாழ்த்தையும் ஏற்றுக் கொண்டார்..

தொண்டர்கள்
அதேபோல பிரேமலதாவும் தொண்டர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக் சொல்லி, அவர்களுக்கு ரூபாய் நோட்டுகளை பரிசாக வழங்கினார். இந்த நிகழ்வுக்கு பிறகு, தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் சொன்னதாவது: "தமிழகத்தில் நடக்கும் அனைத்து அவலங்களுக்கு அதிமுக, திமுகதான் பொறுப்பு. முக ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 8 மாதமாகிவிட்ட நிலையில் எத்தனை நாள் கடந்த ஆட்சியையே குறை சொல்லிக் கொண்டிருப்பார்?

கட்டிட விபத்து
திருவொற்றியூர் கட்டிட விபத்தை பார்வையிட செல்லாத முதல்வர், திருவிக நகருக்கு திமுக உறுப்பினர் சேர்க்கைக்காக நேரில் சென்றது தவறான முன்னுதாரணம்... முதலமைச்சர் பொறுப்பில் இருப்பவர் இப்படியான செயலில் ஈடுபட கூடாது... எதிர்கட்சியாக இருந்தபோது GO BACK MODI என்றவர்கள் மோடியுடன் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பது என்பது அரசியல்... எல்லாவற்றையும் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். திமுக இப்போது ஆட்சியில் இருப்பதால் மத்திய அரசின் தயவு இவர்களுக்கு தேவைப்படுகிறது...

செயல் தலைவர்
தேமுதிகவை பொறுத்தவரை, கட்சியின் செயல் தலைவர் பொறுப்பு ஏற்படுத்துவது குறித்து மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்... யாரை செயல் தலைவராக்குவது என்று தொண்டர்கள் மற்றும் விஜயகாந்த் முடிவு செய்வார்.. 2026-ல் தனி அணி அமைப்போம் என்பது பாமகவின் உட்கட்சி முடிவு... அதில் எந்தவிதமான கருத்தையும் நான் சொல்ல முடியாது.. 2026-க்கு இன்னும் காலம் இருக்கிறது.

வெள்ளம்
தேர்தலை தேமுதிக எப்படி எதிர்கொள்ளும் என்று அப்போது நிலைமையை பொறுத்து முடிவு செய்வோம். மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பிற்கு ரேடரை குறைசொல்லும் லட்சணத்தில் இந்த அரசாங்கம் இருக்கிறது. யாராக இருந்தாலும் கமிசன், கரப்சனுக்கு அடிபணியாமல் ஆட்சி தரவேண்டும்... நீட், நகைக்கடன் தள்ளுபடி வாக்குறுதியை முறையாக நிறைவேற்றவில்லை என்ற மனக்குறை மக்களுக்கு உள்ளது.

நீட் மரணம்
திமுக ஆட்சியிலும் நீட் மரணம் தொடரவே செய்கிறது... நீட் தேர்வு நடத்தக்கூடாது என்பதில் உறுதியான முடிவை திமுக, மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்... விஜயகாந்த் வந்ததற்கே இவ்வளவு கூட்டம் வந்திருக்கிறது. இதிலிருந்து கட்சி பலவீனமாக இல்லை என்பது தெரியவரும்.. தேமுதிக பலவீனமாக இருப்பதாக சிலர் சொல்வது, பார்ப்போரின் கண்ணோட்டத்தை பொறுத்தது.. ஆட்சியில் இருந்தோரே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தயங்கினாலும் சவாலை எதிர்கொண்டு தனித்து போட்டியிட தயாராக உள்ளோம்" என்றார்.












Click it and Unblock the Notifications