"தேமுதிக அங்கீகாரம் இல்லாத கட்சியா?".. எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா பதிலடி!
சென்னை: அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருப்பதால்தான் 10 தொகுதிகளிலும் முரசு சின்னத்தில் தேமுதிக போட்டியிடுகிறது என எடப்பாடி பழனிசாமிக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பதிலடி கொடுத்துள்ளார்.
அங்கீகாரம் இல்லாத கட்சி திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை வாங்கியதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில், அவரது குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.

தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி
2026 சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் 28 தொகுதிகளிலும், தேமுதிக 10 தொகுதிகளிலும், விசிக 8 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 5 தொகுதிகளிலும், மதிமுக 4 தொகுதிகளிலும், இந்தியன் முஸ்லிம் லீக் கட்சி 2 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன. திமுக வேட்பாளர்கள் 164 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் சார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று வெளியிட்டார். தேமுதிக வேட்பாளர்கள் 10 பேரும் முரசு சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
தேமுதிக வேட்பாளர்கள்
விருத்தாசலம் - பிரேமலதா விஜயகாந்த்
தருமபுரி - V.இளங்கோவன்
சேலம் மேற்கு - அழகாபுரம்.R.மோகன்ராஜ்
விருதுநகர் - வி.விஜய பிரபாகர்
ஓமலூர் - ஏ.ஆர்.இளங்கோவன்,
மைலம் - எல்.வெங்கடேசன்
பல்லாவரம் - அனகை.D.முருகேசன்
திருத்தணி - D.கிருஷ்ணமூர்த்தி
குடியாத்தம் (தனி) - K.B.பிரதாப்
போளூர் - T.P. சரவணன்
பிரேமலதா பேட்டி
தேமுதிகவுக்கு திமுக கூட்டணியில் 10 சீட் ஒதுக்கப்பட்டதை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. தேர்தல் பரப்புரையின்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அங்கீகாரம் கொண்ட விசிக கட்சிக்கு எட்டு தொகுதிகள் தான் திமுக கூட்டணியில் வழங்கப்பட்டது. அதேசமயம் அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு திமுக அதிகமான தொகுதிகளை கொடுத்துள்ளது என விமர்சனம் செய்தார்.
எடப்பாடிக்கு பிரேமலதா பதில்
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். பிரேமலதா விஜயகாந்த், "மூன்றாவது அங்கீகரிக்கப்பட்ட கட்சி தேமுதிக என்பது அனைவருக்கும் தெரியும். அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருப்பதால்தான் 10 தொகுதிகளிலும் முரசு சின்னத்தில் தேமுதிக போட்டியிடுகிறது. பிறகு ஏன் எடப்பாடி பழனிசாமி அப்படி சொன்னார் என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும்" என்றார்.
மேலும் பேசிய பிரேமலதா, "விருத்தாசலம் தொகுதி தேமுதிகவின் கோட்டை. கேப்டனுக்கு முதல் முதலாக வெற்றியைக் கொடுத்த தொகுதி விருத்தாசலம். கட்சி சார்பாக போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள். அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications