பக்கோடா பழனிசாமிக்கு திராவிட மாடல் பற்றி என்ன தெரியும்? ஈபிஎஸ் மீது திமுகவின் முரசொலி பாய்ச்சல்
சென்னை: ஜனாதிபதி தேர்தலை முன்வைத்து திராவிட மாடலை விமர்சனம் செய்த அதிமுக தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக முரசொலியில் எழுதப்பட்டுள்ளதாவது: கட்டியிருக்கும் வேட்டி கழன்று விழும் போது - முண்டாசுவை முறுக்கிக் கட்டினானாம் ஒருவன். அந்த நிலைமையில் இருக்கும் பக்கோடா பழனிசாமி, தி.மு.க.வுக்கு திராவிட மாடல் க்ளாஸ் எடுக்கக் கிளம்பி இருக்கிறார். பா.ஜ.க. சார்பில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்துவிட்டதாம். உடனே தன்னை சமூகநீதிக் காவலராக அவரே சொல்லிக் கொள்கிறார் பழனிசாமி.

தெரிந்தது தரை டிக்கெட் மட்டும்
பா.ஜ.க. சார்பில் பாபா ராம்தேவ் சாமியாரை அறிவித்து இருந்தாலும் சாஷ்டாங்கமாக தனக்கே தெரிந்த ஒரே ஒரு தரை டிக்கெட் திறமையால் வரவேற்புக் கொடுத்திருப்பார் பழனிசாமி. பா.ஜ.க. தனது பம்மாத்து நீலிக்கண்ணீர் அரசியலுக்குப் பலியாடாக ஒருவரை அறிவித்திருக்கிறது. அந்தக் கூட்டணியின் தொங்கு சதையாக இருக்கும் பழனிசாமி அ.தி.மு.க. அதனை ஆதரிக்கிறது. அது அவர்களின் கொத்தடிமை தர்மம். பழனிசாமியைக் கேட்டுவிட்டு பழங்குடியின வேட்பாளரை பா.ஜ.க. அறிவிக்கவுமில்லை. பா.ஜ.க. சார்பில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரைத்தான் குடியரசுத் தலைவராக ஆக்க வேண்டும் என்று பழனிசாமி கோரிக்கை வைக்கவுமில்லை.

பறிபோன பதவி
ஏனென்றால் அவரே அவரது சொந்த நாற்காலியில் உட்கார முடியாத அளவுக்கு நரக வேதனையை அனுபவித்து வருபவர். கோடிகளைக் கொட்டி - அவராக சிலரை ஒரு கல்யாண மண்டபத்திற்கு வரவைத்து - அவர்கள் தான் பொதுக்குழு உறுப்பினர்கள் என்று சொல்லி - அரைமணி நேரத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஆக நினைத்ததில் மண்ணைப் போட்டுவிட்டார் பன்னீர்.

திராவிட மாடல் குறித்து..
ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே செல்லாத பதவி. அந்தச் செல்லாத பதவியை தானே ராஜினாமா செய்து - இப்போதைக்கு அ.தி.மு.க.வின் தலைமை நிலையச் செயலாளராக இருக்கும் பழனிசாமிக்கு தி.மு.க.வின் திராவிட மாடல் குறித்துப் பேச அருகதை இல்லை. அவருக்குத் தெரிந்தது எல்லாம் மண்புழு மாடல் மட்டும் தான். ஜெயலலிதா, சசிகலா, தினகரன் ... அந்த வரிசையில் இப்போது பா.ஜ.க. பழனிசாமி விழுந்தே கிடக்கிறார். கால்கள் தான் மாறிக் கொண்டே இருக்கும். இந்தத் தற்குறிகளுக்கு தி.மு.க.வின் பழைய வரலாறுகள் தெரியாது.

விபிசிங் ஆதரவு
கே.ஆர்.நாராயணன் யார்? மீரா குமார் யார்? - அவருக்கு இவர்களைத் தெரியாது. முத்தமிழறிஞர் கலைஞரால் முன்மொழியப்பட்டு குடியரசுத் தலைவராக ஆக்கப்பட்டவர்கள். பழனிசாமி, இப்படி யாரையும் பரிந்துரைக்க வில்லை. பா.ஜ.க. சொன்னதற்கு தலையாட்டி இருக்கிறார். இந்த பொம்மைகளுக்கு திராவிட மாடல் புரியாது. யார் நிறுத்தப்படுகிறார்கள் என்பதல்ல பிரச்சினை? எந்த தத்துவத்தின் பிரதிநிதியாக நிறுத்தப்படுகிறார் என்பதே முக்கியம். வி.பி.சிங் - மிக உயர்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர். அவரை ஆதரித்தது சமூகவிரோத காரியமாக ஆகிவிடுமா என்ன? என்ன லாஜிக் பேசுகிறார் பழனிசாமி. மீண்டும் சேலம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவியாவது கிடைக்குமா எனப் பார்க்கவும். சமூகநீதி, திராவிட மாடல் எல்லாம் பெரியவங்க பேச வேண்டிய சமாச்சாரம் சாமீ! இவ்வாறு முரசொலியில் எழுதப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications