சென்னை உட்பட.. தமிழகத்தில் அனைத்து வகை தனியார் நிறுவனங்களும் இயங்கலாம்.. தமிழக அரசு அனுமதி
சென்னை: சென்னையில் அனைத்து வகை தனியார் நிறுவனங்களும் இயங்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் அனைத்து வகை நிறுவனங்களையும் திறப்பது தொடர்பாக தமிழக அரசு இன்று ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதை பாருங்கள்:
தமிழகத்தில் நோய்த்தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு மார்ச் 24ஆம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது.

அமைச்சரவை
கடந்த 2ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகளின்படியும் பெருநகர சென்னை காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் பல்வேறு பணிகளுக்கு வழிமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர இந்த பணிகள் மே 11ஆம் தேதி திங்கள்கிழமை முதல் குறிப்பிட்ட நேரத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

33 சதவீத பணியாளர்
பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன், காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும்.

முன்னெச்சரிக்கை
அரசு அறிவுறுத்தப்பட்ட தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதும், போதுமான கிருமிநாசினிகளை பயன்படுத்துவது, பணிபுரியும் பணியாளர்கள் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதையும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழி முறைகளை தீவிரமாக கடைபிடிப்பதையும் கண்காணிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாநகராட்சி ஆணையாளர், காவல்துறையினருக்கும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆதரவு
ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும், தடைகளும் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து முழுமையாக கடைபிடிக்கப்படும். அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும், தனியார் நிறுவனங்களும் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.












Click it and Unblock the Notifications