கடுமையாகும் தண்டனை.. மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி
சென்னை: மது விலக்கு திருத்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தண்டனைகளை கடுமையாக்கும் வகையில் சட்டம் திருத்தப்படும் என்றும் கள்ளசாராயங்களை ஒழிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் எனவும் முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்ததில் 150க்கும் மேற்பட்டோர் உடல்நலன் பாதிக்கப்பட்டனர். இதில் இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனினும் இன்னும் 40க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி நகரம் முழுவதும் அழுகுரல் ஒலித்தது. இதையடுத்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உடனடியாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுத்தார். இதுமட்டுமின்றி இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிட்டார்.
இதேபோல் நீதியரசர் கோகுல்தாஷ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து அதன் விசாரணையும் நடந்து வருகிறது. மேலும் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கினா முதவல்ர் ஸ்டாலின். இனிமேல் இதுபோன்று ஒரு சம்பவம் நடக்காதவாறு இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான் தமிழக சட்டசபையில், மது விலக்குச் சட்டம், 1937-ல் திருத்த மசோதா ஒன்று நாளை அறிமுகம் செய்யப்படும் என்றும், தண்டனைகளை கடுமையாக்கும் வகையில் சட்டம் திருத்தப்படும் என்றும் கள்ளசாராயங்களை ஒழிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபை இன்று கூடியது. அப்போது, சட்டமன்றப் பேரவையில், சட்டமன்ற உறுப்பினர் கோ க மணி பேசும்போது குறுக்கிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.
முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:- மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இங்கு, கூட்டத் தொடர் தொடங்கியதிலிருந்து கடந்த சில நாட்களாகவே கள்ளக்குறிச்சி விவகாரத்தைத் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். இதைத் தான் மீண்டும் மாண்புமிகு உறுப்பினர் திரு. கோ.க.மணி அவர்கள் இங்கே எடுத்துப் பேசத் தொடங்கியிருக்கிறார்.
என்னைப் பொறுத்தவரை, உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருட்களைக் காய்ச்சுதல், விற்பனை செய்வது போன்ற குற்றங்களுக்கான தண்டனை போதுமானதாகவும் கடுமையாகவும் இல்லை. இதுபோன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்கி, இக்குற்றங்களை முற்றிலும் தடுக்க முதற்கட்டமாக, தமிழ்நாடு மது விலக்குச் சட்டம், 1937-ல் திருத்த மசோதா ஒன்று நாளை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்ற விவரத்தை இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுகவினருக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்றும், இதில் திமுகவுக்கு தொடர்பு இருக்கிறது என்றும் எனவே சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தினார். சிபிசிஐடி விசாரணை நடந்தால் உண்மை குற்றவாளிகளை தப்பிக்க விட்டுவிடுவார்கள்.
உண்மை வெளிவராது. மாநில கட்டுப்பாட்டில் சிபிசிஐடி உள்ளதால் உண்மை வெளிவராது. குற்றவாளிகள் தப்பித்து விடுவார்கள். என்று கூறியிருந்தார். இது தொடர்பாக ஆளுநர் ரவியை சந்தித்து மனு கொடுத்தார். இதேபோல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் இது தொடர்பாக ஆளுநரை சந்தித்து மனுவும் கொடுத்துள்ளார். இதேபோன்று தேமுதிகவும் சிபிஐ விசாரணை கோரி ஆளுநரை சந்தித்தார்.












Click it and Unblock the Notifications