அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை திடீரென சூழ்ந்து முற்றுகையிட்ட பொதுமக்கள்.. சென்னையில் பரபரப்பு!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சூழ்ந்துகொண்டு பொதுமக்கள், அடிப்படை வசதிகள் கோரி போராடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : சென்னை ராயபுரம் மூலக் கொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தச் சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, மூலக்கொத்தளம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டு, அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி போராட்டம் நடத்தினர்.
சென்னை மூலக் கொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவுச் சின்னத்திற்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.
இந்த நிகழ்வில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அமைச்சர் உதயநிதியை முற்றுகையிட்டு அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
அன்பகத்தில் அனல் பறக்கும் கேள்விகள்! திமுக இளைஞரணி பதவிகளுக்கு நேர்காணல் நடத்தும் உதயநிதி ஸ்டாலின்!
அமைச்சர் உதயநிதி மரியாதை
இந்தி திணிப்பை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டு தமிழ் மொழிக்காக இன்னுயிர் ஈந்த மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தைப் போற்றும் வகையில் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் நாள் அனுசரிக்கப்படுகின்றது. இந்நிலையில், மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன், ஆகியோரின் நினைவிடத்திற்கு இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேரணியாகச் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில்
சென்னை ராயபுரம் மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன், ஆகியோரின் நினைவிடத்திற்குச் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதைத்தொடர்ந்து அருகே உள்ள மற்றொரு மொழிப்போர் தியாகியான டாக்டர் தர்மாம்பாள் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பெண்கள் முற்றுகை
மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்துவதற்காக வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மூலக்கொத்தளம் இடுகாட்டுக்கு பின்புறத்தில் உள்ள பகுதியைச் சேர்ந்த பெண்கள் திடீரென முற்றுகையிட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி உதயநிதி ஸ்டாலினை முற்றுகையிட்டனர்.
பரபரப்பு
தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு செய்துதரவில்லை என்றும் கழிப்பிடம், சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை செய்து தரவும் வலியுறுத்தி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், பொதுமக்கள் உதயநிதி ஸ்டாலினை நெருங்காமல் தடுத்து நிறுத்தி, அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.