சென்னையில் 15 சிறுமியை சீரழித்த 21 பேர்.. தண்டனை விவரங்கள் இன்று வெளியாகவில்லை.. ஏன் என்னாச்சு?
சென்னை: சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் காவல் ஆய்வாளர், பத்திரிகையாளர் உள்ளிட்ட 21 பேர் குற்றவாளிகள் என சென்னை போக்சோ நீதிமன்றம் அறிவித்த வழக்கில், நீதிபதி விடுமுறை என்பதால் அவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்படவில்லை.
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 15 வயது சிறுமிதான் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டார். அந்த 15 வயதுச் சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக சிறுமியின் உறவினர்கள் மீது புகார் வைக்கப்பட்டது.
சிறுமியின் உறவினர் ஷகிதா பானு, உடந்தையாக இருந்த எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், நாகராஜ், மாரீஸ்வரன், பொன்ராஜ், மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான அஜி என்கிற வெங்கட்ராமன், ஸ்ரீபெரும்புதூர் கார்த்திக், திரிபுராவைச் சேர்ந்த தெபாசிஸ் நாமா உள்ளிட்ட 26 பேர் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் தலைமறைவாக இருந்த சிலரை தேடி வந்தனர்.

22 பேர் கைது
இந்த நிலையில் 22 பேரை கடந்த 2020- ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 26 பேர்களில், இரு பெண்கள் உள்பட 4 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை இப்போது வரை போலீஸாரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

22 பேரில் ஒருவர் மரணம்
மீதமுள்ள 22 பேர்களில் மாரீஸ்வரன் என்பவர் விசாரணை காலக் கட்டத்தின் போது இறந்து விட்டார். மீதமுள்ள 21 பேர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சென்னை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் நீண்ட விசாரணை நடத்தியது. இதில் சிறுமியை இவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது விசாரணையில் தெரியவந்தது. வசதிபடைத்தவர்களுக்கு சிறுமியை அனுப்பி இவர்கள் பணம் சம்பாதித்ததும் தெரியவந்தது.

பாலியல் வழக்கு
18 வயதுக்குள்பட்ட சிறுமியின் வழக்கு என்பதால் இந்த வழக்கு விசாரணை மூடிய அறையில் நடத்தப்பட்டது. கைது செய்யப்பட்டோருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த வழக்கு கடந்த 15 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ராஜலட்சுமி, குற்றம் சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் புகழேந்தி, மதன்குமார், சாயிதாபானு, சந்தியா, செல்வி, கார்த்திக், மகேஸ்வரி, வனிதா, விஜயா, அனிதா என்கிற கஸ்தூரி, ராஜேந்திரன், காமேஸ்வரராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், வினோபாஜி, கிரிதரன், ராஜாசுந்தர், நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம் (எ)அஜய் கண்ணண் ஆகிய 21 பேர் குற்றவாளிகள் என தீர்மானித்து அறிவித்தார். இவர்களுக்கான தண்டனை விவரத்தை வரும் 19 ஆம் தேதி கூறுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் அறிவிப்பாகும் தண்டனை விவரம்
இவர்களுக்கான தண்டனை விவரங்கள் இன்று (செப்டம்பர்19) அறிவிப்பதாகவும் நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்திருந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக ஒரு வாரம் காலம் விடுப்பு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே 21 பேர் மீதான தண்டனை விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications