முன் ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூர்த்தி மனு.. சென்னை ஐகோர்ட்டில் இன்று மாலை அவசர விசாரணை!
சென்னை: முன் ஜாமின் கோரி புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ஜெகன்மூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜெகன்மூர்த்தியின் கோரிக்கையை ஏற்று அவரது முன் ஜாமீன் மனு இன்று மாலை 5.30 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். இதில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தி கடத்தியதாக புகார் எழுந்தது.
காதல் விவகாரத்தில் இளைஞரை கடத்தியதாக எம்.எல்.ஏ பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைதாகியுள்ளனர். மேலும் பூந்தமல்லியை அடுத்த ஆண்டர்சன்பேட்டையில் உள்ள புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி வீட்டில், அவரை கைது செய்ய போலீசார் நேற்று சென்ற போது, புரட்சி பாரதம் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.
மேலும், ஏராளமானோர் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்து குவிந்தனர். ஜெகன் மூர்த்தியை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவள்ளூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புரட்சி பாரதம் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் சென்றபோது ஜெகன்மூர்த்தி அவரது வீட்டில் இல்லாததால் அவர்கள் திரும்பினர்.
தன்னை கைது செய்வதை எதிர்த்து திரண்ட ஆதரவாளர்களைப் பயன்படுத்தி ஜெகன்மூர்த்தி அங்கிருந்து கிளம்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெகன்மூர்த்தி தலைமறைவானதாக கூறப்படுகிறது. அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காதல் விவகாரத்தில் இளைஞரைக் கடத்திய வழக்கில் தலைமறைவாக உள்ள புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி, முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற அவரது தரப்பின் கோரிக்கையை ஏற்று இன்று மாலை 5.30 மணியளவில் விசாரணை நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications