முதல்வருக்கு சென்னை அத்துப்படி... எடப்பாடி பழனிசாமிக்கு 2 ரோடுகளை தவிர எதுவும் தெரியாது -எ.வ.வேலு
சென்னை: சென்னையில் எந்தப் பகுதியில் எதனால் தண்ணீர் தேங்கும் என்ற முழு விவரமும் முதலமைச்சருக்கு தெரியும் என்பதால், அவரே நேரடியாக களத்தில் இறங்கி மழைவெள்ள நிவாரணப் பணிகளை கவனித்து வருவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கிரீன்வேஸ் சாலை, தலைமைச் செயலக சாலை ஆகிய இரண்டு சாலைகளை தவிர சென்னையில் வேறு எதுவுமே தெரியாது என அவர் கிண்டல் அடித்துள்ளார்.

நாமக்கல்லில் நெடுஞ்சாலைத்துறை ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது இதனைக் கூறினார்.
மேலும், எதிர்க்கட்சியினர் அரசியல் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் வாய்ப்பே கொடுப்பதில்லை என்றும் ஏற்கனவே சென்னை மாநகர மேயராக இருந்த காரணத்தால் மழை வெள்ள பாதிப்புகளை முதலமைச்சரே அதிகாரிகளிடம் நேரடியாக பேசி விடுவதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
ஊடகங்களில் ஏதாவது பேச வேண்டுமே என்பதற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அரசு மீது அவர் குற்றஞ்சாட்டி வருவதாகவும் இணைப்புச் சாலைகளில் தண்ணீர் தேங்கத் தான் செய்யும் என்றும் அதனை எப்படி வெளியேற்றுகிறோம் என்பதே என்பதே முக்கியம் எனவும் அவர் தெரிவித்தார்.
சென்னையின் பல்வேறு இடங்களில் இணைப்பு சாலைகளில் தேங்கி நின்ற மழை நீர் இரண்டே மணி நேரத்தில் வடிய வைக்கப்பட்டதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். இதனிடையே தமிழகத்தில் சாலைகளை விரிவுப்படுத்துவது தவிர்க்க முடியாதது எனக் கூறிய அவர், இந்தப் பணிகளுக்காக மரங்கல் வெட்டப்பட்டால் அப்படியே விட்டுவிடமாட்டோம் எனவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சாலை விரிவாக்கப் பணிகளுக்கு வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிதாக மரக்கன்றுகளை நட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே தங்களுக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் மழைக்காலம் முடிந்த பின்னர் தமிழகம் முழுவதும் சாலைகள் பழுது நீக்கப்படும் எனவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருக்கிறார்.
தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழையால் பல்லாயிரம் கிலோ மீட்டர் சாலைகள் பழுதடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் சேத மதிப்புகளை ஆராய்ந்து மழைக்காலத்திற்கு பிறகு சாலை செப்பனிடப்படும் என்ற அமைச்சரின் தகவல் முக்கியத்துவம் வாய்ந்தது.












Click it and Unblock the Notifications