ஆரம்பமே சரவெடி! நான் ஏசி ரூம் ஆபீசர் இல்லை! சர்க்கரையை சுவைத்து தரம் பரிசோதித்த ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்!
சென்னை: கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளராக பொறுப்பேற்ற ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். ஆரம்பத்திலேயே அதிரடி காட்டத் தொடங்கியுள்ளார்.
கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்புத் துறை தானே என்று எண்ணாமல் அங்கும் தனது சுறுசுறுப்பான பணிகளால் பொறுப்பேற்ற இரண்டே நாட்களில் அந்த துறைகளை மக்கள் மத்தியில் கவனம் ஈர்க்கச் செய்திருக்கிறார் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை உள்ளிட்டப் பொருட்கள் தரமாக உள்ளதா என இன்று ஆய்வு நடத்தி ஊழியர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்
சுகாதாரத்துறையில் இருந்து கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளராக ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். பொறுப்பேற்று இரண்டு நாட்கள் மட்டுமே ஆகின்றன. இந்த இரண்டு நாட்களில் துறையின் மொத்தப் பணிகள் குறித்த விவரத்தையும் தன் மேசைக்கு கொண்டுவர வைத்துவிட்டார் அவர். அதனடிப்படையில் மீட்டிங் நடத்த ஆரம்பித்துள்ள அவர் இந்தப் பணிகள் ஏன் சுணக்கமாக உள்ளது, என்ன காரணம் என கேள்விகணைகளை வீசத் தயாராகிவிட்டார்.

அதிரடி ஆய்வு
இதனிடையே சென்னையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குகள், நியாய விலைக் கடைகள், அமுதம் அங்காடிகளுல் உள்ளிட்டவற்றில் இன்று காலை முதலே தொடர் ஆய்வு நடத்திய ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். அரிசி மற்றும் சர்க்கரையும் தரத்தை பரிசோதித்தார். சர்க்கரையை வாயில் அள்ளிப் போட்டு சுவைத்து பார்க்கவும் செய்தார். இதேபோல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குகளின் ஊழியர்களிடமும் பேசி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அக்கறை -ஆர்வம்
ஏ.சி.ரூமில் அமர்ந்தோமோ அரசாங்க காரில் வீட்டிற்கு சென்று வந்தோமா என்றில்லாமல் நேரடி கள ஆய்வு நடத்தி, இவரால் துறைக்கு பெருமை சேரும் வகையில் நடந்துகொள்ளத் தொடங்கியுள்ளார். இவர் செயலாளராக இருந்தபோது சுகாதாரத்துறை எப்படி மக்கள் மத்தியில் பிரபலமானதோ அதைப்போல் இனி கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்புத் துறையும் மக்கள் மத்தியில் கவனம் ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இருக்காது எனத் தெரிகிறது.

சாமானிய மக்கள்
கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்புத் துறை ஆகிய இரண்டு துறைகளுமே சாமானிய மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள துறைகளாகும். இதனால் இந்தத் துறையை முன்னேற்றிடும் வகையில் அரசுடன் கலந்து பேசி இன்னும் பல புதிய திட்டங்களை ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். இனி வரும் நாட்களில் நடைமுறைப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏசி ரூம் அதிகாரி
இதனிடையே இந்த ஆய்வை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., ''நான் ஏசி ரூம் அதிகாரி கிடையாது. கீழ்மட்டத்தில் உள்ள ஊழியர்கள், அலுவலர்களின் கருத்தைக் கேட்டு இந்த துறையில் பணியாற்றுவேன். அடுத்த வாரம் டெல்டா மாவட்டங்களுக்கு ஆய்வுக்குச் செல்கிறேன். விவசாயிகளின் நெல் கொள்முதல் பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும்.''

மாவட்ட ஆட்சியர்கள்
''விரைவாக நெல் கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை அவர்கள் முறையாக பயன்படுத்துகிறார்களா என்பதை நானே நேரடியாக ஆய்வு செய்து இனி கண்காணிக்க இருக்கிறேன். ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் அமுதம் அங்காடிகள் உலகத்தரத்துக்கு தரம் உயர்த்தப்படும்.'' என ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications