ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா! தமிழக காங். சிறுபான்மையினர் அணிக்கு இலக்கு நிர்ணயித்த மேலிடம்!
சென்னை: கன்னியாகுமரியில் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி ராகுல் காந்தி மக்கள் சந்திப்பு நடைபயணத்தை தொடங்கும் நிலையில், அதில் சிறுபான்மையினர் சமூகத்தினரை பெருமளவில் பங்கேற்க வைக்க காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் அணி திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்கவும் ஆலோசனைகள் நடத்தி ஒவ்வொரு நிர்வாகிக்கும் இலக்கு நிர்ணயிக்கவும் சென்னை வந்திருக்கிறார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மையினர் அணிச் செயலாளர் இம்ரான் பிரதாப்கர்ஹி.
இவரை பெரும் படையுடன் சென்று வரவேற்ற மகிளா காங்கிரஸ் தேசிய நிர்வாகி ஹசீனா சையத், ராகுல் நடைபயண நிகழ்ச்சியில் தன்னுடன் பங்கேற்க 500க்கும் மேற்பட்டோர் தயாராக இருப்பதாக கூறி வியக்க வைத்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல்
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில் இப்போதே தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை தொடங்குகிறார் ராகுல் காந்தி. பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் 12 மாநிலங்கள் வழியாக 150 நாட்களுக்கு இந்த பயணத்தை நடத்துகிறார் ராகுல்காந்தி. சுமார் 3,500 கிமீ தூரம் பயணம் செய்யும் வகையில் ராகுலுக்கு பயணத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்கான முன்னேற்பாடுகளை காங்கிரஸ் கட்சியின் அனைத்துப் பிரிவுகளும் செய்து வருகின்றன.

சிறுபான்மையினர் அணி
அந்த வகையில் ராகுல் பயணம் செல்லும் மாநிலங்களுக்கு எல்லாம் முன்கூட்டியே விசிட் அடித்து வரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மையினர் அணிச் செயலாளர் இம்ரான் பிரதாப்கர்ஹி, பாரத் ஜோடோ யாத்ராவில் சிறுபான்மையினர் மக்களை அதில் அதிகளவில் பங்கேற்க வைக்க ஒவ்வொரு நிர்வாகிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இலக்கு நிர்ணயித்து வருகிறார். அந்த வகையில் சிறுபான்மை சமுதாய பிரமுகரும், மகிளா காங்கிரஸ் தேசிய நிர்வாகியுமான ஹசீனா சையத், இம்ரான் பிரதாப்கர்ஹியே எதிர்பார்க்காத வகையில் 500க்கும் மேற்பட்டோருடன் பாரத் ஜோடோ யாத்ராவில் பங்கேற்க உள்ளதாக கூறி வியக்க வைத்திருக்கிறார்.

உற்சாக வரவேற்பு
முன்னதாக சென்னை வந்த சிறுபான்மையினர் அணி செயலாளர் இம்ரானுக்கு பெரும் பெண்கள் படையுடன் சென்று உற்சாக வரவேற்பு கொடுத்திருக்கிறார் ஹசீனா சையத். சிறுபான்மையினர் அணியின் மாவட்ட மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் இம்ரான், ஆக்டிவாக செயல்படுபவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்ற உறுதியையும் வழங்கியுள்ளாராம்.

திருப்புமுனை
பாஜக ஆட்சிக்கு எதிராக கன்னியாகுமரியில் ராகுல் தொடங்கும் இந்தப் பயணம் அவருக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திருப்புமுனையை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. கடந்த கால தேர்தல்களில் ராகுல் முறையாக பிரச்சாரத்துக்கு செல்லவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்த முறை அது போன்ற குற்றச்சாட்டுகளுக்கே இடமிருக்காது எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications