ஸ்டாலின் சென்னையில் தந்த இடி.. ராகுல் டெல்லியில் தந்த அடி.. ஒரேநாளில் பாஜகவுக்கு 2 ஷாக் தந்த தமிழகம்
: ராகுல் காந்தியும், ஸ்டாலினும் ஒரே நாளில் பாஜகவுக்கு 2 ஷாக் தந்திருக்கிறார்கள்
சென்னை: ஒரே நாளில் பாஜகவுக்கு தமிழகம் 2 விதமான அதிர்ச்சியை தந்துவிட்டது.. இது யாருமே எதிர்பாராத வகையில் நடந்திருந்தாலும், தமிழகத்தின் முக்கியத்துவம் தேசிய அளவில் உயர்ந்து கொண்டு வருகிறது என்பதே உண்மை..!
Recommended Video
ராகுல் அடிக்கடி வெளிநாட்டுக்கு பறந்துவிடுகிறார், 5 மாநில தேர்தல் வரும்போதுகூட, ராகுல் பிரச்சாரங்களுக்கு செல்வதில்லை, விளையாட்டுத்தனம் அதிகமாக உள்ளது, தலைமை பொறுப்பை தட்டிக் கழிக்கிறார் என்றெல்லாம் பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் விடாமல் குற்றங்களை சுமத்தி கொண்டிருக்கின்றன.
ஆனால், ராகுல் ஒவ்வொரு முறையும் பாராளுமன்றத்தில் பேசும்போது மட்டும் பாஜக சத்தமின்றி அடங்கி விடுகிறது.. அது நேற்றைய பாராளுமன்றத்திலும் நன்றாகவே தெரிந்தது. அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த பேச்சாக ராகுலின் உரை அமைந்திருந்தது.

பிரச்சனைகள்
ஒவ்வொரு மாநிலத்துக்கு உள்ளேயும் புகுந்து, அந்த மாநிலத்தின் பிரதான பிரச்சனைகளை இழுத்து கொண்ட வந்து, அவையில் ராகுல் கேட்ட நறுக் கேள்விகளை பாஜக எதிர்பார்க்கவில்லை.. அதற்கான பதில்களை கையில் தயாராக வைத்திருக்கவுமில்லை.. பதில் சொல்லவும் முடியவில்லை.. ராகுலை அடக்கவும் முடியவில்லை.. கைதட்டல்கள் அரங்கை பிளந்து கொண்டிருக்க, ராகுல் சீறிக் கொண்டிருக்க, பாஜகவால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. இதை ஒட்டுமொத்த இந்தியாவும் கவனித்தது.

முதல்வர் ஸ்டாலின்
அடுத்ததாக, நம் முதல்வர் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.. 37 அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஸ்டாலின், சமூக நீதிகூட்டமைப்பில் இணையுங்கள் என்று அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் , சோனியா காந்தி, சரத்பவார், லாலு பிரசாத், பவன் கல்யாண், ஓவைசி, அரவிந்த் கெஜ்ரிவால், என். ரங்கசாமி, மாயாவதி, வைகோ, திருமாவளவன், ராமதாஸ், மம்தா பானர்ஜி உட்பட 37 அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ளார்.

கடிதம்
மாநில உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பலமுறை இப்படி ஸ்டாலின் முதல்வர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.. ஆனால், இந்த கடிதம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.. "எல்லாருக்கும் எல்லாம்' என்பதை அடிப்படையாய்க் கொண்டதுதான் சமூகநீதியாகும்... சமத்துவம், சுயமரியாதை மற்றும் சமூகநீதி ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் இவற்றை எதிர்த்துப் போரிட முடியும், இது அரசியல் ஆதாயம் பற்றியதல்ல. மாறாக நமது குடியரசு அமையப் பாடுபட்டோர் காண விழைந்த அடையாளத்தை மீண்டும் நிலைநிறுத்துவது பற்றியது ஆகும்" என்று கூறியுள்ளார்.

சித்தாந்தங்கள்
திமுகவை பொறுத்தவரை தன்னுடைய கருத்தியலில் எப்போதுமே உறுதிப்பாட்டுடன் பயணிக்கிறது.. தன்னுடைய சித்தாந்தங்களையும், கொள்கைகளையும் யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை.. அதேசமயம், தமிழக மக்களின் நலன்களை பெற்றுத்தர, மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கையாண்டு வருகிறது.. விரைவில் அடுத்தடுத்த தேர்தல்கள் வர உள்ளநிலையில், ஸ்டாலினின் இந்த கடிதம் வலிமை வாய்ந்ததாக திகழ்கிறது.. ஒட்டுமொத்த பாஜக எதிர்ப்பு மனநிலையில் உள்ளோரையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார்.

தனிப்பெரும்பான்மை
முதன்முதலில் சந்திரபாபு நாயுடுதான் இதற்கான முயற்சியை கையில் எடுத்தார்.. அடுத்ததாக அதை மம்தா பானர்ஜி டேக்ஓவர் செய்து கொண்டாலும், அகில இந்திய அளவில் ஒரு கூட்டணிக்கான முன்னேற்பாடாகவே ஸ்டாலினின் கடிதம் கருதப்படுகிறது.. தமிழ்நாட்டில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் தொடர விரும்பும் திமுக, மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கவும் ஆசைப்படுகிறது.. ஆனால், காங்கிரஸ் தலைமையில் பாஜகவை எதிர்ப்பது என்ற கருத்தொருமிப்பு எதிர்க்கட்சியிடம் வலுவாக உருவாகவில்லை...

பாஜக
பாஜகவிடமிருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிர முனைப்பு காட்டாதபட்சத்தில், திமுகவின் நிலைப்பாடு என்னவாகும் என்ற கேள்வியும் இதுவரை இருந்து வந்தது.. ஆனால் அனைத்து சந்தேகங்களையும் நேற்றைய தினம் ராகுலின் பேச்சு நொறுக்கிவிட்டது... அதுமட்டுமல்ல, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை அவ்வளவு எளிதில் திமுக கைவிடும் என்று சொல்ல முடியாது. தென் மாநிலங்களில் இன்றளவும் காங்கிரஸ் கட்சிக்கு குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி இருக்கிறது.. அந்த வாக்குகள் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் வாய்ப்புகளாக உள்ளன..

கடிதம்
அதேபோல், மத்தியில் அடுத்த ஆண்டு காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்துவிட்டால் அதுவும் திமுகவுக்கு சிக்கலாக மாறிவிடும் என்பதையும் மறுக்க முடியாது.. காங்கிரஸை உள்ளடக்கிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தான் திமுக நிச்சயம் ஈடுபடும்.. எப்படியிருந்தாலும் சரி, இப்படி ஒரு லெட்டர் ஷாக்கை ஸ்டாலினிடமிருந்து பாஜக எதிர்பாக்கவே இல்லை.. ஒன்றியம் என்ற வார்த்தையையே ஜீரணிக்க முடியாத பாஜகவால், தமக்கு எதிரான ஒருங்கிணைப்பு என்ற முன்னெடுப்பை நிச்சயம் ஏற்க முடியாதுதான்.. ஒருபக்கம் ராகுலின் கர்ஜனை, இன்னொரு பக்கம் ஸ்டாலினின் ஆக்ஷன் என 2 விதமான அதிரடிகளில் பாஜக திணறி கொண்டிருக்கிறது..!












Click it and Unblock the Notifications