ஒன் இந்தியா செய்தி எதிரொலி.. ஓகே சொன்ன ரயில்வே! தென்காசி, அதிராம்பட்டினத்தில் கேரளா ரயில் நிற்கும்
சென்னை: வேளாங்கண்ணி - எர்ணாகுளம் இடையேயான நிரந்தர ரயில் சேவையில் பல ரயில் நிறுத்தங்கள் நீக்கப்பட்டது இருந்தது பற்றி ஒன் இந்தியா தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது நீக்கப்பட்ட ரயில் நிலையங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் முதல் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கேரள மாநிலம் எர்ணாகுளம் இடையே வாராந்திர சிறப்பு விரைவு ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் எர்ணாகுளத்தில் புறப்பட்டு வேளாங்கண்ணி வரை சென்று மீண்டும் எர்ணாகுளத்திற்கு திரும்பும். சனிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு இந்த எர்ணாகுளத்தில் புறப்படும்.

இந்த ரயில் கேரள மாநிலத்தின் கோட்டையம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவலிக்கரா, காயங்குளம், சாஸ்தா கோட்டா, கொல்லம், குந்தாரா, கொட்டாரக்கரா, புனலூர், தென்மலை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி வந்தது.
அதேபோல், செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய தமிழ்நாட்டின் ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் ரயில் ஞாயிறு அதிகாலை 05.50 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

மீண்டும் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு வேளாங்கண்ணியில் புறப்பட்டு இதே வழியாக திங்கள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளத்தை ரயில்சென்றடையும். வாரம் ஒரு முறை மட்டும் இயங்கி வந்த இந்த சிறப்பு விரைவு ரயில் சேவையை நிரந்தரமாக்கி வாரம் இரண்டு முறை இயக்குவதாக அண்மையில் ரயில்வே அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி நிரந்தர ரயில் எர்ணாகுளத்தில் சனிக்கிழமை பகல் 1.00 மணிக்கு புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.45 மணிக்கு வேளாங்கண்ணியை வந்தடையும். பின்னர் ஞாயிறு மாலை 06.40 மணிக்கு இந்த ரயில் வேளாங்கண்ணியில் புறப்பட்டு திங்கள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளத்தை அடையும்.
திங்கள் நண்பகல் 1.00 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.45 மணிக்கு வேளாங்கண்ணியை அடையும். அதேபோல் செவ்வாய்க்கிழமை மாலை 6:40 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு புதன் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளத்தை ரயில் சென்றடையும்.
வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் இந்த ரயில் நிரந்தர ரயிலாக இயக்கப்படும் என்று அறிவித்த தெற்கு ரயில்வே ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் நேர பட்டியலையும் வெளியிட்டது. ஆனால், அதில்,
கேரளாவில் மாவலிக்கரா, சாஸ்தா கோட்டா, குந்தாரா, தென்மலை ஆகிய ரயில் நிலையங்கள் இடம்பெறவில்லை.
தமிழ்நாட்டில் கடையநல்லூர், சங்கரன்கோவில், அதிராம்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் ஏற்கனவே ரயில் நிறுத்தப்பட்டு வந்த நிலையில் நிரந்தர ரயில் நிறுத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டது மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. இது தொடர்பாக ஒன் இந்தியாவில் 2 முறை செய்தி வெளியிட்டு மக்களின் கோரிக்கையை ரயில்வே நிர்வாகத்துக்கு கொண்டு சென்றோம்.












Click it and Unblock the Notifications