ரயில் டிக்கெட்டை ரத்து செய்யும் பயணிகளின் கனிவான கவனத்துக்கு.. தெற்கு ரயில்வே முக்கிய அலார்ட்
சென்னை: ரயிலில் பயணிக்க முடியாத நிலையில் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்கின்ற போது அதற்குரிய கட்டணத்தை திரும்ப செலுத்த பயணிகளிடமிருந்து வங்கிக் கணக்கு விவரங்களை ரயில்வே துறை ஒரு போதும் கேட்பதில்லை என்று தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.
ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள், ஒருவேளை டிக்கெட்டை கேன்சல் செய்தால் அடுத்த சில நாளில் தானாகவே பணம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இதுவே இப்போது உள்ள நடைமுறை. ஆனால் பயணிகளை ரயில்வேயில் இருந்து பேசுவதாக ஏமாற்றுவது நடந்து வருகிறது.
ரயில் டிக்கெட்டை ரத்து செய்யும் பயணிகளின் செல்லிடப்பேசியை சில மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு ரயில் டிக்கெட்டுக்கானத் தொகையை வரவு வைக்க வங்கிக் கணக்கு விவரங்களைக் கோருவதாக சில புகார்கள் வந்த காரணத்தால் தெற்கு ரயில்வே பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கி கணக்கு எண்
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரயில் பயணிகள் கவனத்துக்கு, இந்திய ரயில்வே, ஐஆர்சிடிசி அல்லது அதன் ஊழியர்கள் யாருமே, தனிநபர்களைத் தொடர்பு கொண்டு அவர்களது கிரெடிட் அல்லது டெபிட் அட்டை எண்களையோ, அந்த அட்டையின் முடியும் தேதி, ஓடிபி, ஏடிஎம் பின், சிவிவி எண் அல்லது பான் எண், பிறந்த தேதி என எதையும் கேட்க மாட்டார்கள் .

பணம் செலுத்தப்படும்
ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக ரயிலில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்திருந்தீர்கள் என்றால், அந்த டிக்கெட்டை ரத்து செய்கிற போது, எந்த வங்கிக் கணக்கில் இருந்து டிக்கெட்டுக்கு பணம் செலுத்தப்பட்டதோ, அந்த வங்கிக் கணக்குக்கு அபராதம் கழிக்கப்பட்டு மீதித் தொகை தானாகவே வரவு வைக்கப்பட்டுவிடும்.

உரிய ஆவணம்
அதேவேளையில் ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் நீங்கள் டிக்கெட்டை எடுத்து அதனை ரத்து செய்திருந்தால், உரிய காலத்துக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

138 உதவி எண்ணை அழையுங்கள்
ஒருவேளை, ரயில்வேயில் இருந்து அழைப்பதாகக் கூறி வங்கிக் கணக்கைக் கேட்டால் தர வேண்டாம். அத்துடன் 138 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெறலாம்" இவ்வாறு பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications