அனல் பறக்கும் வெப்பம்.. சில்லுனு கொஞ்சம் மழையும் இருக்கு.. நாளை வாக்குப்பதிவு நாளில் என்ன கிளைமேட்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்கள் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதேநேரம் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட ஒரு வானிலையே நிலவி வருகிறது.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
வெப்பம்: அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரைத் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் பொதுவாக இயல்பை விட 2° - 4° செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் இயல்பை விட அதிகமாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது. அதிகபட்சமாகக் கரூர் பரமத்தியில் 41.5° செல்சியஸ், ஈரோட்டில் 41.4° செல்சியஸ் பதிவாகி உள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 38.3° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.1° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
மழை இருக்கு: வானிலை மையம் அடுத்த வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்தும் தனது செய்திக்குறிப்பில் விளக்கி உள்ளது. அதில், "தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை ஏப்ரல் 19ஆம் தேதி தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை மறுநாள் ஏப்ரல் 20இல் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வரும் நாட்கள்: வரும் ஏப்ரல் 21 மற்றும் ஏப்ரல் 22 ஆகிய நாட்களில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் ஏப்ரல் 23, 24 ஆகிய நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பம்: அதிகபட்ச வெப்ப நிலையைப் பொறுத்தவரை அடுத்த இரண்டு தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் படிப்படியாக 2° செல்சியஸ் உயரக்கூடும். அதற்கு அடுத்த மூன்று தினங்களில் 2° - 3° செல்சியஸ் சற்றே குறையக்கூடும். வரும் ஏப்ரல் 22 வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75 % ஆகவும் மற்றும் கடலோர பகுதிகளில் 50-85 % ஆகவும் இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். மேலும் அடுத்த 2 நாட்கள் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
தலைநகர் சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: 19.04.2024 மற்றும் 20.04.2024: வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications