சென்னை மக்களே ரெடியா இருங்க.. 4 மணிக்குள் மழை பட்டையை கிளப்பப்போகுது.. சுற்று வட்டாரத்திலும் அலர்ட்
சென்னை: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாக சுட்டெரித்து வந்தது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4 ஆம் தேதி தொடங்கியதால் வெயில் எப்படி இருக்குமோ என்ற அச்சத்தில் இருந்து வந்த நிலையில் அன்றைய தினம் முதலே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 13 ஆம் தேதி தொடங்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் 16 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று மாலை 4 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், இன்று மாலை 4 மணி வரை சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications