3 மாணவிகள் கொலையாளிகள் விடுதலைக்காக 3 முறை அரசு வலியுறுத்தியது: ஆளுநர் மாளிகை பரபர விளக்கம்
Recommended Video

சென்னை: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 3 பேரை முன்கூட்டியே விடுதலை செய்தது ஏன் என்பது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரண்டாயிரமாவது ஆண்டு ஓராண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தமிழகம் முழுக்க அதிமுகவினர் வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தர்மபுரி அருகேயுள்ள இலக்கியம்பட்டியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக மாணவிகள் பயணித்த பஸ் மீது அதிமுகவினர் பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்ததில் ஹேமலதா, காயத்ரி, கோகிலவாணி ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டனர். 16 மாணவிகள் காயமடைந்தனர்.
[ஜெ.விடம் நல்ல பெயர் எடுக்க போட்டி போட்டு.. பஸ்ஸை எரித்து.. 3 இளந்தளிர்களை கருக்கி.. மறக்க முடியுமா! ]

தமிழக அரசு முடிவு
இந்த வழக்கில், அதிமுக பிரமுகர்கள், நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர்களின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மூவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு நீண்ட நாட்களாக சிறையில் உள்ள 1800 கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.

மூன்று முறை
அதில், தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் சிறையில் இருந்த இந்த மூன்று பேரையும் விடுதலை செய்ய கூறியிருந்தது. முதலில் இந்த பரிந்துரையை ஆளுநர் மாளிகை நிராகரித்த நிலையில் மீண்டும் மொத்தம் 3 முறை தமிழக அரசு வற்புறுத்தியதால் மூவரையும் விடுதலை செய்ய நேற்று ஆளுநர் மாளிகை உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் உடனடியாக சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆளுநர் மாளிகை விளக்கம்
கொலை செய்யும் நோக்கத்தில் வன்முறையில் ஈடுபடவில்லை என்றும், உணர்ச்சி வேகத்தில் நடந்த ஒன்று என்றும் தமிழக அரசு அளித்த விளக்கத்தை ஏற்று ஆளுநர் மாளிகை இம் மூவரையும் விடுதலை செய்ய ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஆளுநர் மாளிகை இந்த சர்ச்சைக்குரிய விடுதலை விவகாரம் தொடர்பாக இன்று விளக்கம் அளித்துள்ளது.

மீண்டும், மீண்டும்
அதில், தண்டனை பெற்ற மூவரும், மாணவிகளை, கொலை செய்யும் நோக்கத்தில் வன்முறையில் ஈடுபடவில்லை, அந்த மாணவிகளுக்கும், கொலை செய்தவர்களுக்கும் முன் அறிமுகம் கூட கிடையாது, என அரசு தரப்பு தெரிவித்தது. இருப்பினும் மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக அரசிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால் மூவரையும் விடுதலை செய்யலாம் என்று தமிழக அரசு மீண்டும் பரிந்துரை செய்தது.

சட்டத்திற்கு உட்பட்டு
மூவருமே, திட்டமிட்டு கொலை சம்பவத்தில் ஈடுபடவில்லை என்ற வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே ஏற்றுக்கொண்டு உள்ளது. தமிழக அரசு பரிந்துரை தன் பெயரிலேயே இந்த மூன்று பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நவம்பர் 12ம் தேதி தமிழக அரசு 3வது முறையாக, 3 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைத்த போதும்கூட ஆளுநர் மாளிகைக்கு மூவரையும் விடுதலை செய்ய விருப்பம் இல்லை. ஆனால், 3 பேரையும் விடுதலை செய்வதால், சமூகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற அரசின் பரிந்துரை ஏற்கப்பட்டு, இந்திய அரசியல் சாசனத்தின் 161வது பிரிவின்கீழ், சட்டத்திற்கு உட்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு ஆளுநர் மாளிகை தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலாளர் வலியுறுத்தல்
3 முறை, தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் புறக்கணித்த பிறகும், தமிழக தலைமை வழக்கறிஞர், தலைமைச் செயலாளர், தமிழக உள்துறை செயலாளர் ஆகியோர், ஆளுநரை சந்தித்து, 3 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், அதற்கான சட்டரீதியான காரணங்களையும் எடுத்து கூறினர் என்றும், ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications