சென்னை அண்ணாநகர் டாஸ்மாக் கடை அருகே போராட்டம்.. ராஜேஸ்வரி பிரியா உள்பட 15 பேர் கைது
சென்னை: சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பை கண்டித்து போராட்டம் நடத்திய அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா கைது செய்யப்பட்டார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் ஒரு கட்டத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க மத்திய அரசு தளர்வு வழங்கியதை அடுத்து தமிழக அரசும் கடந்த ஜூன் மாதம் முதல் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கடைகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில் சென்னையிலும் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் கொரோனா குறையாத நேரத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பது என்ன அவசியமா என்ற கேள்வியையும் எழுப்பினர்.
இந்த நிலையில் கடைகள் இன்று திறக்கப்பட்டன. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா போராட்டம் நடத்தினார்.
மேலும் மதுவுக்கு எதிராக பிரசார ஊர்வலத்தையும் அவர் நடத்தினார். சென்னை அண்ணா நகர் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜேஸ்வரி பிரியா உள்பட 15 பேரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து ராஜேஸ்வரி பிரியா கூறுகையில் கொரோனா ஊரடங்கால் இத்தனை நாட்களாக ஊதியம் இல்லாமல் மக்கள் தவித்து வந்தார்கள்.
எட்டுமணிக்கே க்யூல நின்னு... பூசணி சுத்தி தேங்காய் உடைச்சு... சென்னையில் டாஸ்மாக் ஓபன்
தற்போதுதான் இயல்பு நிலை திரும்பி மக்கள் பணிக்கு சென்று வருகிறார்கள். இந்த நிலையில் அவசர அவசரமாக டாஸ்மாக் கடைகளை திறப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தன்னை சிறையில் அடைத்தாலும் போராட்டம் தொடரும் என ராஜேஸ்வரி பிரியா தெரிவித்தார்.