ரஜினி கட்சிப்பெயர் வெளியிடுவதில் புது சிக்கல் - அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் எச்சரிக்கை
நடிகர் ரஜினிக்கு அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: அரசியல் கட்சி ஆரம்பித்து பெயரை ஆரம்பிக்கும் முன்பாகவே பல பக்கம் இருந்தும் ரஜினிக்கு குடைச்சல்கள் ஆரம்பித்து விட்டன. யாருடைய கட்டாயத்தினால் ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்று திமுக உள்ளிட்ட பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், ரஜினிகாந்த் புதிதாகத் தொடங்க இருக்கும் கட்சியின் பெயருக்கு புது சிக்கல் கிளம்பியுள்ளது. ரஜினி தனது கட்சியின் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும். மீறினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் எச்சரித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அறிவித்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் கட்சி தொடங்கும் பணிகளை ஆரம்பித்துள்ளார் ரஜினிகாந்த். மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட பணிகளை விறுவிறுப்பாக கவனித்து வருகிறார் ரஜினிகாந்த்.
இந்த நிலையில் ரஜினியின் கட்சி பெயர் பற்றியும், சின்னம் பற்றிய தகவல்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதுதான் இப்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்த்... கமல்ஹாசனால்... திமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது... வாக்குகள் சிதறாது -கே.என்.நேரு
ஆட்டோ சின்னம்
நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் அரசியல் கட்சி தொடங்கவுள்ள அவரின் கட்சியின் பெயரை மக்கள் சேவை கட்சி என் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். அவருக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. அத்துடன் டிசம்பர் 31ஆம் தேதி தான் தொடங்க இருக்கும் கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.
ரஜினிக்கு எச்சரிக்கை
ரஜினிகாந்த் புதிதாகத் தொடங்க இருக்கும் கட்சிக்கு, மக்கள் சேவை கட்சி என்று தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வோம் என அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்க.சண்முக சுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குழப்பம் வரும்
அகில இந்திய மக்கள் சேவை இயக்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அரியலூரில் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய தலைவர் தங்க.சண்முகசுந்தரம், கடந்த 25 ஆண்டுகளாக, அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் என்ற பெயரில் நாம் சேவை செய்து வருகிறோம். ரஜினி புதிதாக மக்கள் சேவை கட்சி என தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி செய்தால் மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும்.
கட்சி ஆரம்பிக்கும் முன் சோதனைகள்
ரஜினி தனது கட்சியின் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும். மீறினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் கூட்டத்தில் பேசியுள்ளார். பாண்டிய நாட்டுக்கு வந்த பெரும் சோதனை என்பது போல ரஜினி கட்சி ஆரம்பிக்கும் முன்பாகவே பல முனைகளிலும் இருந்தும் சோதனைகளும் தாக்குதல்களும் வர ஆரம்பித்து விட்டன. எப்படி சமாளிக்கப் போகிறார் ரஜினிகாந்த் பார்க்கலாம்.