திறமை உள்ள இடத்தில் திமிரா? அப்போ ரஜினி, அஜித், விஜய், ஏஆர் ரஹ்மான்! யாரை சொல்கிறார் ஜேம்ஸ் வசந்தன்?
சென்னை: திறமை இருக்கும் இடத்தில் திமிர் இருப்பதாக சமூக வலைதளங்களில் பலர் தத்துவம் சொல்லி வருவதாகவும், அதே நேரம் மைக்கெல் ஜாக்ஸன், எம்.எஸ். விஸ்வநாதன், எஸ். பாலசுப்ரமணியம், ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால், சச்சின் டென்டுல்கர், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான், அஜீத், விஜய் போன்ற பிரபலங்கள் பனிவுடனே இருப்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்து இருக்கிறார்.
சுப்ரமணியபுரம், பசங்க, ஈசன், பாகன், விழா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளரும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன், சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். சினிமா, பொதுவான விசயங்களை கடந்து அரசியல் சார்ந்தும் இவர் பல்வேறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார். இவரது கருத்துக்கள் ஒரு தரப்பால் பாராட்டவும் மற்றொரு தரப்பால் விமர்சிக்கப்பட்டும் வருகிறது.

குறிப்பாக பிராமணர்கள் தொடர்பாக கடந்த 2 மாதங்களுக்கு முன் இவர் கூறிய கருத்து விவாதப் பொருளாக மாறியது. அதேபோல், பாஜகவுக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வரும் இவர், சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு வழங்கிய பேட்டியில் இசையமைப்பாளர் இளையராஜாவை காட்டமாக விமர்சித்து இருந்தார். இதனால் இளையராஜா ரசிகர்கள் ஜேம்ஸ் வசந்தன் மீது காட்டமாக விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.
ஜேம்ஸ் வசந்தன் பதிவு

இந்த நிலையில் பிரபலங்கள் திமிருடனும் பணிவுடனும் இருப்பது தொடர்பாக ஜேம்ஸ் வசந்தன் பேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில், "சமூக வலைதளத் தத்துவங்களில் ஒன்று - "திறமை இருக்கும் இடத்தில் திமிர் இருக்கத்தான் செய்யும்." இதை யார் எங்கிருந்து கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை. எத்தனையோ திறமைசாலிகளும், சாதனையாளர்களும் அவர்கள் அடைந்த உயரத்திலும் பணிவுடனும், அடக்கத்துடனும் இருப்பதை இந்த உலகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. அவர்கள்தான் அவர்களைப் பின்பற்றுகிறவர்களுக்கு நல்ல உதாரணப் புருஷர்களாக (Role Models) இருக்க முடியும்.
பணிவுடன் பிரபலங்கள்

திறமையும் வெற்றியும் மட்டுமே ஒருவனுடைய தரத்தை நிர்ணயிக்காது. அவனது திறமையை அங்கீகரித்து அவனை அந்த இடத்தில் உயர்த்தி அமரை வைக்கிற அவன் சார்ந்த சமூகத்த்தில் அவன் எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டுச் செல்கிறான் என்பதுதான் வரலாற்றில் அவனுடைய தரம்.
இந்தத் தலைமுறையில் நாம் பார்த்த மைக்கெல் ஜாக்ஸன், எம்.எஸ். விஸ்வநாதன், எஸ். பி. பி, பார்க்கிற ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால், சச்சின் டென்டுல்கர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஏ.ஆர். ரஹ்மான், அஜீத், விஜய், குட்டி லிட்யன் நாதஸ்வரம் வரை என உலகம் முழுவதும் பல்வேறு நட்சத்திர சாதனையாளர்களின் நற்குணங்களைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம்.
உயிர்கள் உன்னை வணங்கும்
இந்த சாதனையாளர்களின் புள்ளிவிவரங்கள் எப்படி அடுத்த தலைமுறையை உற்சாகப்படுத்தி உழைக்க வைக்குமோ, அதற்கு இணையாக அவர்களுடைய பண்பும், குணநலனும், நடத்தையும் அவர்களைப் பின்பற்றுகிறவரை மாற்றியமைக்கக் கூடிய வல்லமை படைத்தவை. "நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்" என்று கண்ணதாசன் ஒரு பாடலில் எழுதியிருப்பார். நாம் சென்ற பிறகும் இந்த உலகம் இதேபோல்தான் இயங்கிக் கொண்டிருக்கும் என்பதை நினைவில் கொண்டால் எளிமை, பணிவு, அடக்கம் தானாய் வந்துவிடும்!" என்று பதிவிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications