இது லிஸ்ட்டிலேயே இல்லையே.. அதிமுக செய்யத் தவறியதை.. கையில் எடுத்த கமல், ரஜினி, பாஜக.. !
எம்ஜிஆர் பெயரை பயன்படுத்தி வருகிறார்கள் பிற கட்சி தலைவர்கள்
சென்னை: அதிமுக செய்யாததை, பாஜக, கமல், ரஜினி என வேற்று கட்சிக்காரர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.. ஆம்.. "எம்ஜிஆர் அரசியலை" கையில் எடுத்துள்ளனர் இவர்கள் எல்லாரும்..!
தமிழக அரசியல் வரலாற்றிலேயே கரீஷ்மா என்று சொல்வார்களே, அது எக்கச்சக்கமாக கொட்டி கிடந்தது எம்ஜிஆரிடம்தான்.. எம்ஜிஆருக்கு பிறகு இப்படி ஒரு வசீகர தலைவரை இந்த தமிழ்நாடு பார்த்ததில்லை.
கொள்கைகள், திட்டங்கள், அதிரடிகள் இருந்தாலும், எம்ஜிஆரை கடைசிவரை மக்கள் மனசில் நிறைந்திருக்க காரணம் அவரது தோற்றம்தான்!
தன் பிம்பத்திற்கு மவுசு இருக்கிறது என்று எம்ஜிஆருக்கு அன்றே தெரிந்தாலும், அதற்காக அரசியலை அசால்ட்டாக அவர் நடத்தவில்லை.. கணக்கு போட்டுதான் தன் வெற்றியை ஒவ்வொரு முறையும் நிரூபித்தார்.. சொல்லி சொல்லியே எதிர்க்கட்சிகளை திணறடித்தார்.. 10 வருட ஆட்சி காலத்தில் எத்தனையோ விமர்சனங்களை எம்ஜிஆர் சுமந்தாலும் அத்தனையையும் முறியடித்துவிட்டுதான் எம்ஜிஆர் ஓய்ந்தார்!
ஆளுமை
அதனால்தானோ என்னவோ, எம்ஜிஆரின் ஆளுமை, அவரது சிறப்புகள், தொடர்ந்து 3 முறை பெற்ற மகத்தான வெற்றி போன்றவைகளை முன்னிறுத்தியே, அவருக்கு பின் வருபவர்கள் அரசியல் செய்ய நினைக்கிறார்கள்.. இதில் ஜெயலலிதா முதல் வெற்றியை பெற்று, எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்துக்கு பிறகு, அம்மா என்ற மூன்றெழுத்தில் நிலைகொண்டுவிட்டார்.
மூன்றெழுத்து
அதற்காக கமல், ரஜினி, பாஜக போன்ற மூன்றெழுத்துக்களும் எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடுவார்கள் என்று சத்தியமாக யாருமே எதிர்பார்க்கவில்லை.. விஜயகாந்த்தை கூட, நடிக்கும்போதே கறுப்பு எம்ஜிஆர் என்று சொன்னார்கள்.. இதற்கு காரணம் நடிப்பு இல்லை, விஜயகாந்தின் மனசுதான்.. அந்த வள்ளல்குணம்தான்.. அதனால்தான், எம்ஜிஆர் போலவே விஜயகாந்தும் நல்லாட்சி என்று மக்கள் நினைத்து, மாஸ் வெற்றியை ஆரம்ப காலங்களில் தந்தனர்.
கமல்
இப்போது தேர்தல் நெருங்கி வருகிறது.. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், "மதுரையை இரண்டாம் தலைநகராக்கும் எம்ஜிஆரின் ஆசை, தனது ஆட்சியில் நிறைவேற்றப்படும்" என்று சொல்லி உள்ளார்.. தனது திட்டத்துக்கும் நாளை நமதே என்று பெயர் வைத்திருக்கிறார்.. சின்ன வயசில் நாளை நமதே படத்தில் கமல் நடிக்க வேண்டி இருந்ததாம்.. ஆனால், அது முடியாமல் போகவும், கட்சிக்குள்ளாவது இந்த பெயர் இருக்கட்டுமே என்று ஆசைப்பட்டு வைத்துள்ளார். "நான் அவர் மடியில் வளர்ந்தவன்... நினைவிருக்கட்டும்" என்று ட்வீட் போட்டு அதிமுக, அமமுக தரப்பை கலக்கத்தில் ஆழ்த்தி விட்டுள்ளார்.
ரஜினி
ரஜினியும் எம்ஜிஆரை விட்டுவைக்கவில்லை.. "அரசியலுக்கு யார் வந்தாலும், யாரும் எம்ஜிஆராக முடியாது. அவர் ஒரு தெய்வப் பிறவி... அவர் போன்ற ஒரு தலைவர் இனி உருவாக முடியாது. எம்ஜிஆர் கொடுத்த ஆட்சியை என்னால் கொடுக்க முடியும்.. இன்னைக்கு நான் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கவே அவர்தான் முக்கிய காரணம்.. அவர் சிபாரிசு செய்துதான் என் கல்யாணம் நடந்தது" என்று ஒரு விழாவில் பேசியிருந்ததை அதிமுக சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதையேதான் லீலா பேலஸ் ஓட்டலிலும் சொன்னார்.
பாஜக
இவர்களாவது பரவாயில்லை, எம்ஜிஆருடன் ஏதோ ஒரு தொடர்பில் இருந்தவர்கள், சினிமாவில் பயணித்தவர்கள்.. ஆனால், சம்பந்தமே இல்லாமல் பாஜக இதில் நுழைந்து, எம்ஜிஆரை தன் பக்கம் வாரிக் கொண்டது, மொத்த தமிழ்நாட்டிற்குமே ஆச்சரியத்தை தந்தது.. ஆச்சரியம் என்று சொல்வதைவிட, திருவள்ளுவர் முதல் பாரதியார் வரை விட்டுவைக்காத பாஜக, எம்ஜிஆரை மட்டும் ஏன் சொந்தம் கொண்டாடியது என்ற குழப்பம்தான் அதிகமாக இருந்தது. வேல் யாத்திரை கொடியில் எம்ஜிஆர் இருந்ததுதான் ஹைலைட்!
சந்தேகம்
நியாயப்படி பார்த்தால், இதையெல்லாம் அதிமுகதான் செய்ய வேண்டும்.. இந்த 4 வருடகாலமாக, "மாண்புமிகு அம்மாவின் ஆட்சி..." என்று சொல்லப்பட்டு வருகிறது என்றாலும், எம்ஜிஆர் பெயரை அவ்வளவாக உச்சரிக்கவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது.. ஒருவேளை இவர்கள் உச்சரிக்க தவறியதால், மற்றவர்கள் எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடி கொள்கிறார்களோ என்ற ஐயமும் எழுகிறது.
மறக்க முடியவில்லை
தங்கள் அதிமுக நிகழ்ச்சிகளில், ஒருசில அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் தவிர எம்ஜிஆரை பற்றி பேசுவதும், நினைவுகூர்வதும் குறைவாகவே உள்ளது என்பதை மறுக்க முடியாது.. ஆனால் மற்றவர்கள் எம்ஜிஆரிடம் நெருங்கினால், அதை மட்டும் அதிமுகவால் ஜீரணிக்கவும் முடியவில்லை.. உண்மையிலேயே எம்ஜிஆர் யாருக்கு சொந்தம்? தேர்தல் முடிந்ததும் மறுபடியும் மறக்கடிக்கப்பட்டு விடுவாரா? என்று சொல்ல தெரியவில்லை.. ஆனால் இறந்து 33 வருஷமாகியும் எம்ஜிஆர் பளிச்சென ஜொலித்து கொண்டே இருக்கிறார் என்று மட்டும் தெரிகிறது!!