ஆன்மீகம் மட்டும்தான் இருக்கு.. அரசியல் எங்க பாஸ்? ரஜினியின் இமயமலை டிரிப்பிற்கு இதுதான் காரணமா?!
நடிகர் ரஜினிகாந்த் இமயமலை சென்றுவிட்டு அங்கு 10 நாட்கள் தியானம் செய்து ஓய்வு எடுக்க இருக்கிறார்.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இமயமலை சென்றுவிட்டு அங்கு 10 நாட்கள் தியானம் செய்து ஓய்வு எடுக்க இருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் அவரின் படங்கள்தான் 6 மாதங்களுக்கு ஒருமுறை வருகிறதே தவிர அவர் அரசியலுக்கு வரவில்லை.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை அவரின் ரசிகர்களை விட பாஜகவும், அதிமுகவும்தான் தீவிரமாக எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் ரஜினி அரசியலுக்கு வருவதற்கான எந்த சுவடும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை.

வரிசையாக படங்கள்
அதிலும் ரஜினிகாந்த் தற்போது வரிசையாக படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கம் படத்தில் நடிக்கிறார். தர்பார் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கம் இன்னொரு படம் ஒன்றில் மீண்டும் நடிக்கிறார். அதாவது 2021 வரை கால்ஷீட் கொடுத்துள்ளார்.

இன்னொரு பக்கம்
இதற்கு இடையில் அவர் அரசியல் குறித்து ஆலோசனை செய்வார். ரசிகர்களை சந்திப்பார். பிரஷாந்த் கிஷோர் போன்ற அரசியல் ஆலோசகர்களை சந்திப்பார் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் ரஜினிகாந்த் மனதில் வைத்திருந்த திட்டமோ வேறு.

எங்கு செல்கிறார்
ஆம் ரஜினிகாந்த் மீண்டும் இமயமலைக்கு செல்ல இருக்கிறார். ஆன்மீக அரசியல் செய்வதாக சொல்லிவிட்டு, அதில் அரசியலை கைவிட்டுவிட்டு வெறும் ஆன்மீகத்தை மட்டும் தற்போது கையில் எடுத்துள்ளார். இன்று இமயமலை செல்லும் அவர் 2 வாரம் கழித்துதான் தமிழகம் வருவார்.

என்ன தியானம்
இமயமலையில் அவர் 10 நாட்கள் தொடர்ச்சியாக தியானம் இருக்க போகிறார். பல்வேறு விஷயங்களை மனதில் வைத்து அவர் இந்த பயணத்தை மேற்கொள்கிறார். அரசியல் குறித்து முடிவுகளை எடுப்பதற்காக அவர் இந்த பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார் என்கிறார்கள்.

முக்கிய முடிவு
பொதுவாக ரஜினிகாந்த் தனது வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எல்லாம் இமயமலைக்கு சென்றுவிட்டு பின்தான் எடுப்பார். அதேபோல்தான் அரசியல் குறித்தும் முடிவு எடுக்க உள்ளார் என்கிறார்கள். அரசியலுக்கு வருவாரா, இல்லை மக்களுக்கு விருப்பமான சினிமாவிலேயே இருப்பாரா என்பதை அவரின் இந்த பயணம் தீர்மானிக்கும் என்கிறார்கள்.

என்ன ஆலோசனை
மன ரீதியாக பல விஷயங்களுக்கு அவர் தயாராகவில்லை என்கிறார்கள். அதேபோல் தொடர் உழைப்பு காரணமாக அவர் கொஞ்சம் அழுத்தத்தில் இருக்கிறார். அமைதியை விரும்பி அவர் இதை செய்கிறார். இமயமலை அவருக்கு புது தெளிவை கொடுக்க போகிறது என்று அவருக்கு நெருக்கமான ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

தீபாவளி எப்படி
தீபாவளிக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன் ரஜினிகாந்த் தமிழகம் திரும்ப உள்ளார். அப்போது அவர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார். அது பலருக்கு அதிர்ச்சி அளிக்கலாம் என்கிறார்கள். பல வருடங்களாக ரஜினியின் முக்கிய அறிவிப்பிற்காக காத்திருந்த அவரின் ரசிகர்கள்இன்னும் இரண்டு வாரம் காத்திருக்க வேண்டும்!












Click it and Unblock the Notifications