ராஜ்யசபா வேட்பாளர்கள்: தேமுதிக சுதீஷ், பாமக அன்புமணி உள்ளிட்ட 6 பேரும் வேட்பு மனு தாக்கல்
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். திமுக, அதிமுக வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், ராஜ்யசபா காங்கிரஸ் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் இன்று அறிவிக்கப்பட்டார். தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார். பாமக சார்பில் அன்புமணி போட்டியிடுகிறார்.
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் காலியாகும் 37 மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கான தேர்தல் தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. மாநிலங்களவையை பொறுத்தவரை தமிழ்நாட்டிற்கு மொத்தம் 18 இடங்கள் உள்ளன. அதில் என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், தம்பிதுரை, திருச்சி சிவா, கனிமொழி சோமு மற்றும் ஜி.கே. வாசன் ஆகியோரின் மாநிலங்களவை பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

இந்த காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி தொடங்கிய நிலையில், மார்ச் 5 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.
மாநிலங்களவை தேர்தலில் 34 எம்எல்ஏக்கள் வாக்களித்தால் ஒரு ராஜ்யசபா எம்.பி.யை தேர்ந்தெடுக்க இயலும். அத்தகைய சூழ்நிலையில், திமுக சார்பாக 4 பேரும், அதிமுக சார்பாக 2 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
திமுக - தேமுதிக வேட்பாளர்கள்
தமிழ்நாட்டில் மாநிலங்களவை தேர்தலில் திமுக தரப்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக செய்தித்தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு முதல் முறையாக ராஜ்யசபா எம்.பி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
4 மாநிலங்களவை சீட்டுகளில் ஒன்றினை தேமுதிகவிற்கு ஒதுக்கியுள்ளது திமுக. இன்னொரு இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி உள்ளது திமுக. தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ், மாநிலங்களவை எம்.பி ஆக தேர்வு செய்யப்பட உள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர்
காங்கிரஸ் கட்சி சார்பில் கிறிஸ்டோபர் திலக் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் கிறிஸ்டோபர் திலக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கிறிஸ்டோபர் திலக், அகில இந்திய காங்கிரஸ் செயலாளராக பதவியில் உள்ளார்.
அதிமுக - பாமக வேட்பாளர்கள்
அதிமுக சார்பில் தம்பிதுரை மீண்டும் ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் மாநிலங்களவைக்கு அன்புமணி போட்டியிடுகிறார். 3வது முறையாக மாநிலங்களவை எம்.பி ஆகிறார் அன்புமணி.
"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 16.3.2026 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.
பாமக சார்பில் அன்புமணி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாமக தலைவர் அன்புமணி, தலைமைச் செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது மனைவி செளமியா அன்புமணியும் உடன் வந்தார்.
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக கூட்டணியின் 4 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்தனர். கிறிஸ்டோபர் திலக் (காங்கிரஸ்), எல்.கே சுதீஷ் (தேமுதிக) ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடும் 6 வேட்பாளர்களுமே இன்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications