ராமதாஸ் காரில் பாமக கொடியை அகற்றிவிட்டு வன்னியர் சங்க கொடி.. என்ன காரணம்? தொண்டர்கள் ஷாக்!
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் தனது காரில் பொருத்தப்பட்டிருந்த பாமக கொடியை அகற்றிவிட்டு வன்னியர் சங்கத்தின் கொடியைப் பொருத்தி உள்ளார். பாமக கட்சிக்கு அன்புமணியே தலைவர் என்றும், அவரை ஏற்பவர்கள் மட்டுமே கட்சி கொடியை பயன்படுத்த முடியும் என்றும் அண்மையில் வழக்கறிஞர் பாலு தெரிவித்திருந்த நிலையில், ராமதாஸ் கொடியை மாற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வன்னியர் இட ஒதுக்கீடுக்காக உயிர்நீத்த தியாகிகள் தினத்தையொட்டி, தனது காரில் இருந்த பாமக கொடியை அகற்றிவிட்டு தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வன்னியர் சங்கம் கொடியை மாற்றியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

ராமதாஸ் - அன்புமணி மோதல்
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிலவி வருகிறது. இருவரும் மாறி மாறி கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்த நிலையில், அன்புமணியை கட்சியை விட்டே நீக்குவதாக அண்மையில் அறிவித்தார் ராமதாஸ். ஆனால், கட்சியில் இருந்து தன்னை நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை என்றார் அன்புமணி.
அன்புமணி தலைமையில் தான் பாமக இயங்குகிறது என்றும், தேர்தல் ஆணையம் தங்களைத்தான் அங்கீகரித்துள்ளது என்றும் கூறி வருகிறது அன்புமணி தரப்பு. அண்மையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்புமணி ஆதரவாளர் வழக்கறிஞர் கே. பாலு, பாமக தலைவராக அன்புமணி ராமதாஸை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அன்புமணியே தலைவர்
மேலும், கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் அன்புமணி தலைமையில் நடைபெற்ற பா.ம.க பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துவிட்டது. பாமக தலைவராக அன்புமணியை தொடரச் செய்யும் தீர்மானத்தையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது அன்புமணியை பாமக தலைவராக அங்கீகரித்து தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது எனத் தெரிவித்தார்.
அன்புமணியின் பாமக தலைவர் பதவிக் காலத்தை 2026 வரை நீட்டிப்பதற்கு அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. தேர்தலின் போது பாமக வேட்பாளருக்கு மாம்பழம் சின்னத்தை வழங்க பரிந்துரைக்கும் அதிகாரம் அன்புமணிக்கே உண்டு. அன்புமணியை பாமக தலைவராக ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே பாமக கொடி, சின்னத்தை பயன்படுத்த முடியும் எனத் தெரிவித்தார்.
காரில் கொடியை மாற்றிய ராமதாஸ்
இப்படியான சூழலில் தான், தனது காரில் இருந்த பாமக கொடியை அகற்றிவிட்டு வன்னியர் சங்கம் கொடியை மாற்றியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். வன்னியர் இட ஒதுக்கீடுக்காக உயிர்நீத்த தியாகிகள் தினத்தையொட்டி, அந்தத் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ராமதாஸ் கொடியை மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னணி என்ன?
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 1980ஆம் ஆண்டு தொடங்கி 1989ஆம் ஆண்டு வரை நூற்றுக்கணக்கான போராட்டங்களை ராமதாஸ் நடத்தினார். அந்தப் போராட்டங்களின் ஒரு கட்டமாக 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி இதே நாளில் ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டத்தை ராமதாஸ் தொடங்கினார். இந்தப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான வன்னியர் சமூக மக்கள் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்தின்போது கூட்டத்தைக் கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடி தாக்குதலில் வன்னியர்கள் 21 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வு ராமதாஸின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமானதாகும். இதைத்தொடர்ந்தே பாமக எனும் கட்சியை தொடங்கினார் ராமதாஸ். இந்த நாளை நினைவுகூரும் விதமாகவே இன்று தனது காரில் இருந்து பாமக கொடியை அகற்றிவிட்டு வன்னியர் சங்கக் கொடியை பொருத்தி இருக்கிறாராம் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications