ராமேஸ்வரத்தில் பாதயாத்திரை தொடங்கிய அண்ணாமலை.. புதுவிளக்கம் கொடுத்த இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன்
சென்னை: ராமேஸ்வரம் என்பது முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் இடம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்திருந்தார்.
வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியே மீண்டும் 3ஆவது முறை பிரதமராக வர வேண்டும் என பாஜகவினர் விரும்புகிறார்கள். அவர் இந்தியாவுக்கு செய்த சாதனைகளுக்காகவே பாஜக அரசு மீண்டும் அமையும் என்கிறார்கள்.
இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து எப்படியும் 25 எம்பிக்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற இலக்குடன் உள்ள அண்ணாமலை நேற்று முதல் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

அந்த பாதயாத்திரையின் போது அவர் பாஜகவின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் விளக்குகிறார். இந்த பாதயாத்திரையை 110 நாட்கள் நடத்தவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதிகபட்சம் ஜனவரி 20ஆம் தேதிக்குள் முடித்துவிட வேண்டும் என்ற இலக்குடன் பயணத்தை தொடங்கியுள்ளார்.
இந்த பாதயாத்திரை குறித்து முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்த போது அவர் கூறுகையில் குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த கலவரம், தற்போது மணிப்பூரில் நடந்து வரும் கலவரம் ஆகியவற்றுக்கான பாவ மன்னிப்பு கேட்கும் பாவயாத்திரை என விமர்சித்திருந்தார்.
அது போல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில் அவரது உடல்நலத்திற்காக டாக்டர் நடக்கச் சொல்லியிருப்பார். அதனால் அவர் நடக்கிறார். மற்றபடி இந்த பாதயாத்திரையால் எந்தவித தாக்கமும் ஏற்படாது என்றார்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ராமேஸ்வரம் என்பது இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் இடமாகும். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையை தொடங்கியது மூலம் பாஜகவிற்கான முடிவுரை எழுதப்பட்டு விடும் என்பதையே காட்டுகிறது.
விளம்பரத்திற்காக அண்ணாமலை யாத்திரை செல்கிறார் என விமர்சித்துள்ளார். இதுகுறித்து இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு பேசுகையில் ஒரு வேளை உடலை சீராக வைத்துக் கொள்வதற்காக மருத்துவரின் ஆலோசனையின்படி அண்ணாமலை இந்த பாதயாத்திரையை மேற்கொள்கிறாரோ என்னவோ தெரியவில்லை.
ஆனால் நடைப்பயணம் மட்டுமல்ல, எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தை பொருத்தமட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிதான் 39 இடங்களிலும் வெல்லும். புதுச்சேரியில் ஒரு இடத்தையும் நாங்கள்தான் வெல்வோம். இதில் எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்திருந்தார்.
இந்த பாதயாத்திரை நிகழ்ச்சிக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தும் அவர் வரவில்லை. ஆனால் அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்றிருந்தார். எடப்பாடி பழனிசாமி வராததற்கு காரணம், இந்த பாதயாத்திரைக்கு அண்ணாமலை ஓபிஎஸ்ஸையும் அழைத்தது எடப்பாடிக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. அது போல் தேசிய அளவில் பிரதமர் மோடி, அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி நெருக்கமாக இருந்த நிலையில் அண்ணாமலையுடனான உறவில் விரிசல் இருப்பதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications